அர்ஜுன் ரெட்டி யார்? விசிக மாநாட்டுக்கு அவர்தான் பணம் தருகிறாரா? போட்டு உடைத்த திருமா?
சென்னை: மோடி பிரதமர் பதவிக்கு வரலாம் நான் பிரதமர் பதவிக்கு வரக்கூடாதா?அதற்கு எனக்குத் தகுதி இல்லையா? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விசிக வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக் ஆக மாறி இருக்கிறது. இந்த மாநாடு திமுக அரசுக்கு நெருக்கடி தரும் விசயமாக மாறும் என்றும் ஒருவேளை இதை வைத்து அதிமுக கூட்டணிக்கு விசிக போக வாய்ப்பு உள்ளது என்றும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. சிலர் இதை வைத்து விசிகவை திமுக அணியிலிருந்து வெளியேற்றிவிடலாம் என்றும் காய் நகர்த்தி வந்தனர். இறுதியில் அமெரிக்கா சென்று திரும்பிய முதல்வர் ஸ்டாலின், இந்த மாநாட்டில் திமுக சார்பில் 2 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனாலும், பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் மது ஒழிப்பைப் பற்றிப் பேசிவருகின்றன. இந்தக் கட்சிக்கு விசிக அழைப்பு விடுக்கவில்லை. அதைக் குறித்துப் பேசிய நடிகர் கருணாஸ், 'பாமக சாதிக் கட்சி என்றால் விசிக என்ன கட்சி?' என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் விசிக மது ஒழிப்பு மாநாடு ஐடியாவே ஆதவ் அர்ஜுன் வகுத்துத் தந்த திட்டம் என்றும், அவர் எடுத்த சர்வேவை வைத்துத்தான் இப்படி திருமா ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார் என்று எக்கச்சக்க வதந்திகள்.
வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மண்டலத்தின் சார்பாக விசிக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திருமாவளவன் இந்தக் கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி வகையில் பேசினார். அவர், "நான் எங்கேயும் கூட்டணியை முறிக்கும்படி பேசவில்லை. எங்களுக்குள் உள்ள வலியை நாங்கள் சொல்கிறோம். அதுதான் எங்கள் துணிச்சல். நாமக்கல்லுக்காகப் போராடினோம். வேங்கை வயல் பிரச்சினைக்காகப் போராடினோம். ஸ்ரீமதி படுகொலையைக் கண்டித்துப் போராடினோம். கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகளைக் கண்டித்து போராட்டங்களை நடத்தினோம்.
இதைப் பாராட்டுகின்ற பெருந்தன்மை உங்களிடம் இருக்கிறது. இதை எடுத்தால் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே ஒரு சர்ச்சை உருவாகும் என்பது எங்களுக்குத் தெரியாதா? அது பிரச்சினையாக மாற வாய்ப்பும் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதா? ஆனால், இது மக்கள் பிரச்சினை. அதற்காக எதையும் எதிர்கொள்ளத் தயார் என்று சொன்னேன்.
மது ஒழிப்பு மாநாடு பற்றி அறிவித்த அன்றே திமுக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்பதை தெளிவு படுத்திய பிறகு சமூக ஊடகங்களில் சிலர் வேண்டும் என்றே இவர் கூட்டணி மாற காய் நகர்த்துகிறார். எடப்பாடியிடம் துணை முதல்வர் பதவிக்குப் பேசி விட்டார் என்று சொல்கிறார்கள். நான் பிரதமராகலாம் என்று ஆசைப்படுகிறேன். இவர்கள் என்னைத் துணை முதல்வர் என்கிறார்கள். என் இலக்கே வேறு. ஏன் நான் பிரதமராக ஆசைப்படக் கூடாதா? அதற்காகத் தகுதி எனக்கு இல்லையா? மோடி இந்தியாவின் பிரதமராகலாம், திருமாவளவன் ஆகக் கூடாதா? குறைந்த பட்சம் ஜெகஜீவன் ராம் போலத் துணைப் பிரதமராக வருவோம்.
சமூக ஊடகங்களில் விசிகவை பற்றி பேசுபவர்கள் யாரும் நடுநிலையானவர்கள் இல்லை. இவர்கள் தேவையில்லாமல் ஆதவ் அர்ஜுன் மீது தூக்கி பழியைப் போடுகிறார்கள். ஆதவ் நம் கட்சி வளர வேண்டும் என்று விரும்புகிறார். பெரியாரையும் அம்பேத்கரையும் நம் கட்சிக்கு வருவதற்கு முன்பே ஏற்றுக்கொண்டவர். மார்ட்டின் பெரிய கோட்டீஸ்வரர். அவரது மருகன் ஆதவ் அர்ஜுன். இவர்தான் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டிற்கு முழுக்க செலவு செய்தாராம். தொண்டர்கள் எவ்வளவு பணம் வங்கிக் கணக்கில் செலுத்தினார்கள் என்பதை நான் தெளிவாக வெளியிட்டும் அப்படிப் பேசுகிறார்கள்.
அவர் பெயர் அர்ஜுன் தான். ஆனால், சிலர் அவர் பெயருடன் ரெட்டியைச் சேர்த்துச் சொல்கிறார்கள். அவர் எங்கேயும் தன்னை அர்ஜுன் ரெட்டி என்று சொன்னதில்லை. ஏனென்றால் அவரை தெலுங்கர் எனச் சொல்ல வேண்டுமாம். இப்படித் திட்டமிட்டு வன்மத்துடன் பேசுகிறார்கள். இப்படிப் பேசப் பலரை இறக்கிவிட்டுள்ளார்கள். அதனால்தான் சொன்னேன், பறையர் என்று சொல்லிக் கொண்டு வந்தால் உள்ளே விடாதீர்கள் என்று. அவர்கள் எல்லாம் கூலிகள். பணம் வாங்கிக் கொண்டு பேசக் கூடிய உதிரிகள்.
ஒருத்தன் கேட்கிறான் விசிக என்ன கட்சி? சாதிக்கட்சி இல்லையா என்று. நாங்கள் சாதி ஒழிப்பைப் பேசுகின்ற கட்சி. சாதி பெருமையைப் பேசக் கூடிய கட்சியல்ல. நாங்கள் ஆண்டபரம்பரை என்று சொல்லவில்லை. நாங்கள் ஆண்ட வம்சம் இல்லை அறிவு வம்சம். பகவான் புத்தர் வழி வந்தவர்கள். பேராசான் மகாத்மா பூலே வழி வந்தவர்கள். அண்ணல் அம்பேத்கர் வழி வந்தவர்கள். தந்தைப் பெரியார் வழி வந்தவர்கள்" என்று ஆவேசமாக விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications