Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை குடியரசுத் தலைவர் ஆகும் தமிழர்.. யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எம்.பியாக இருந்து பின்னர் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ஆளுநராக செயல்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவியை அலங்கரிக்க இருக்கிறார்.

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் அண்மையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தின் தொடக்க நாளில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Who is CP Radhakrishnan BJP s Pick for Vice President Post

யார் இந்த சி.பி ராதாகிருஷ்ணன்?

1957ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி திருப்பூரில் பிறந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். தனது 16 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டார் சி.பி ராதாகிருஷ்ணன். ஆர்.எஸ்.எஸ், ஜன சங்கம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றினார். எமர்ஜென்சி காலகட்டத்தின் போது மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். முதலில் ஜனதா கட்சியில் இருந்த இவர், பின்னர் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து படிப்படியாக மேலே வந்தார் சி.பி.ராதாகிருஷ்ணன். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பாஜக வலுவாகக் காலூன்றியபோது முக்கிய முகமாக இருந்தார். 1998, 1999 ஆகிய மக்களவை தேர்தல்களில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். அதன்பிறகு போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் இரண்டாம் இடமே பெற்றார்.

தனிப்பட்ட செல்வாக்கு

2014ல் திமுக, அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளின் துணையின்றி தனித்து போட்டியிட்டு 3.8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று ஆச்சரியப்படுத்தினார் சி.பி.ராதாகிருஷ்ணன். இது கோவை பகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இருக்கும் செல்வாக்கை அனைவருக்கும் உணர்த்தியது.
1990 முதல் 1995 வரை, 2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார் சி.பி ராதாகிருஷ்ணன். அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தேசிய கயிறு வாரிய தலைவராக பதவி வழங்கப்பட்டது. பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

ஆளுநர்

இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசை சவுந்தரராஜன், மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்தபோது, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலைஆளுநர் கூடுதல் பொறுப்பு, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. பின்னர் மகாராஷ்டிர மாநில ஆளுநராக மாற்றப்பட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

துணை ஜனாதிபதி வேட்பாளர்

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜகதீப் தன்கர் அண்மையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தின் தொடக்க நாளில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் உள்ளதால் சி.பி.ராதாகிருஷ்ணன், அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+