அனுராதாவை நிறுத்தத் துடிக்கும் தினகரன்.. விவேக்கை களமிறக்க விரும்பும் சசிகலா.. தேனிக்கு அடிதடி!
சென்னை: பெரியகுளம் தொகுதி எப்போதுமே அதிமுக கோட்டை என்றால் அது மிகையல்ல. 2008-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்க்கு பிறகு பெரியகுளம் தொகுதி தேனி தொகுதியாக மாறியது.
2008- க்கு முன்னர் பெரிய குளம் தொகுதியில் அதிமுக 7 முறை வென்றுள்ளது. அதன்பிறகு 2014 -ல் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் அதிமுகவே வென்றது. இந்த வெற்றி கூட மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருந்தது. அதிமுக சார்பில் இங்கு போட்டியிட்ட பார்த்திபன் 5.71 லட்சம் வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் 2.56 லட்சம் வாக்குகளும் பெற்றனர்.
2014 -ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற அதே வாக்குகளை எண்ணிக்கை அடிப்படையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போதும் தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவைகளிலும் சேர்த்து அதிமுக பெற்றது. அதாவது 5.70 வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. ஆக நடந்து முடிந்த தேர்தல் வரை தேனி தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே உள்ளது.
தற்போதைய அமமுகவின் து.பொது செயலாளர் தினகரன் அதிமுக உறுப்பினராக இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு இணக்கமாக இருந்தபோது போட்டியிட்டு வென்ற தொகுதியும் பெரியகுளம் தொகுதிதான். 1999-ம் ஆண்டு போட்டியிட்டு வென்றவர் அதன்பிறகு 2004 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ் வேட்பாளர் ஜே. எம். ஆரோன் ரசீத்தை விட 21,155 வாக்குகள் குறைவாக பெற்று நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டார்.
தோல்வியை தழுவினாலும் அதிமுகவின் செல்வாக்கு இன்னும் அங்கு குறையவில்லை. அதோடு தேனி தொகுதியை பொருத்தமட்டில் தங்க தமிழ் செல்வன் குடும்பத்திற்கும் அங்கு தனி மதிப்பு உண்டு, அதுபோல தினகரனுக்கும் அந்த தொகுதியில் தனி செல்வாக்கு உண்டு. இந்த நிலையில் இந்த தொகுதியை எப்படியும் கைப்பற்றியே தீருவது என்று அமமுக கங்கணம் கட்டிக் கொண்டு அந்த தொகுதியில் வேலை செய்து வருகிறது.
அமமுக நிர்வாகிகள் பலரும் இந்த தொகுதியில் தினகரன் போட்டியிடவேண்டும் என்று விரும்புகிறார்களாம், தினகரன் இல்லாத பட்சத்தில் தங்க தமிழ் செல்வன் இங்கு போட்டியிட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால் ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் தினகரன் இங்கு மறுபடியும் போட்டியிட வேண்டாம் என்று சசிகலா கூறிவிட்டாராம். இதனால் தனது மனைவி அனுராதாவை தேனி தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என்று தினகரன் கருதுகிறாராம்.
சசிகலாவோ இளவரசியின் மகன் விவேக்கை அங்கு நிறுத்த விருப்பப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. விவேக்கை நிறுத்தினால் அதிமுக தரப்பிலிருந்தும் பெரிய எதிர்ப்பு இருக்காது என்றும் சசிகலா நினைக்கிறாராம். எப்படியிருந்தாலும் தேனி தொகுதி மக்கள் சசிகலா குடும்ப வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டிய நிலையை உருவாக்கும் என்பதே இப்போதைய தகவல்.