தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளராக தாரேஸ் அகமது நியமனம்! டாக்டர் டூ ஐஏஎஸ்.. யார் இவர்?
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய துறைகளில் உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், சுகாதாரத்துறை செயலாளராக தாரேஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான தாரேஸ் அகமது யார்? என்ற விவரங்களை பார்க்கலாம்.
கேரள மநிலம் மஞ்சேரியில் பிறந்தவர் தாரேஸ் அகமது. 1977 ஆம் ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி பிறந்த தாரேஸ் அகமது, எம்பிபிஎஸ் முடித்தவர். மருத்துவராக பணியாற்றுவதை விட இந்திய ஆட்சி பணியில் இருந்தால் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று எண்ணிய தாரேஸ் அகமது குடிமை பணி தேர்வுகளுக்கு தயாரானார்.

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி காட்டியவர்
கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் (IAS) சேர்ந்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் 'சுகாதாரக் கொள்கை மற்றும் திட்டமிடல்' பாடத்தில் முதுகலைப் பட்டமும் இவர் பெற்றுள்ளார். தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சேர்ந்த தாரேஸ் அகமது, பணிக்காலத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் துறைகளில் பணியாற்றியுள்ளார். பெரம்பூலூர் மாவட்ட கலெக்டராக இருந்த போது, அந்த மாவட்டத்தின் தனிநபர் வருமானத்தை உயர்த்தவும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையை மாற்றவும் பல திட்டங்களை முன்னெடுத்து வரவேற்பை பெற்றார்.
பெண் சிசுக்கொலைக்கு எதிராக எடுத்த அதிரடி நடவடிக்கைகள் இவரது சிறந்த நிர்வாகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. கடந்த 2011-இல் 851-ஆக இருந்த பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை முறையான கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு மூலம் 2013-இல் 1016-ஆக உயர்த்திக் காட்டினார். இதற்காக, 2012-13 ஆம் ஆண்டிற்கான "பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்கான பிரதமரின் விருது" இவருக்கு கிடைத்தது.
நீட் தேர்வு மாணவர்களுக்கு ஆலோசனை
தேசிய நலவாழ்வு குழும இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்த துறையில் பணியாற்றிய போது, மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு என அதிகாரிகள் மட்டத்தில் சொல்கிறார்கள். கைடன்ஸ் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் 'கைடன்ஸ்' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்த மாணவர்களுக்கு '104' ஹெல்ப்லைன் மூலம் ஆலோசனைகள் வழங்கியது. உக்ரைனில் போர் ஏற்பட்ட போது, அங்கிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை அளித்தது, தமிழகத்தின் 'தற்கொலை தடுப்பு கொள்கையை' வகுப்பதில் முன்னின்றது போன்றவற்றில் இவரது செயல்பாடுகள் பெரிதும் பேசப்பட்டது.














Click it and Unblock the Notifications