விஜய்யின் principal secretary! செந்தில் குமாருக்கென 2022ல் ஸ்டாலின் உருவாக்கிய புதிய பதவி! யார் இவர்
சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்து தற்போது விஜய்யின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.செந்தில் குமார் ஐஏஎஸ் யார் என்பதை பார்க்கலாம்.
முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் அவரது முதன்மைச் செயலாளராக (தனிச் செயலாளர்- 1) பி.செந்தில் குமாரையும் தனிச் செயலாளர்-2 வதாக லட்சுமி பிரியாவையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

எந்த அரசு வந்தாலும் அவர்களுக்கு தேவையான அதிகாரிகளை நியமித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் உமாநாத் ஐஏஎஸ்ஸுக்கு பதிலாக செந்தில் குமார் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைமைச் செயலாளராக டாக்டர் பி. செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே இந்தத் துறையின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றியவர் இவர்.
முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டார்.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.
அந்த வகையில் சுகாதாரத்துறையிலிருந்து முதன்மைச் செயலாளராக பொறுப்புக்கு வந்த டாக்டர் பி. செந்தில்குமார், 1995 ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த அனுபவமிக்க அதிகாரி ஆவார். 1968ல் தமிழ்நாட்டில் பிறந்த இவர், வேளாண்மையில் இளங்கலை, முதுகலை பட்டங்களும், பூச்சியியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொது நிர்வாகப் பயிற்சி பெற்றவர். விழுப்புரம் கூடுதல் ஆட்சியர், திண்டுக்கல், அரியலூர் மாவட்டங்களின் ஆட்சியர் என பல பதவிகளை இவர் வகித்துள்ளார்.
2017ல் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முதன்மைச் செயலாளராகவும், மக்கள் மற்றும் மறுவாழ்வு நலத்துறையின் பொறுப்பு தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தி.மு.க. அரசு ஆட்சி வந்ததும், சுகாதாரத் துறை சிறப்புச் செயலாளராகக் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். இந்தப் புதிய பதவி உருவாக்கம் அப்போது சில விவாதங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. சிறப்புச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன், நிதித்துறை (செலவினம்) செயலாளராகப் பணிபுரிந்தார்.
அதற்கு முன்னர் நகராட்சி நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர், போக்குவரத்துத் துறை இயக்குநர் என பல முக்கியமான பொறுப்புகளையும் இவர் திறம்பட வகித்துள்ளார். இவரது பரந்துபட்ட நிர்வாக அனுபவம், சுகாதாரத் துறைக்கான இவரது தற்போதைய உயர் நியமனத்திற்கு வலு சேர்க்கிறது.
இதுவரை சுகாதாரத் துறை செயலாளர் என பதவி இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு சுகாதாரத் துறை சிறப்பு செயலாளர் என்ற பதவியை ஸ்டாலின் உருவாக்கினார். இதன் மூலம் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications