வடசென்னையிலிருந்து ரிப்பன் பிலிடிங்கை ஆள போகும் திமுக பிரியா! சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர்
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையின் மேயராக திமுக சார்பில் பிரியா ராஜன் போட்டியிடுகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 200 வார்டுகளில் திமுக 153 வார்டுகளிலும் அதிமுக 15 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 4 வார்டுகளிலும் மதிமுக இரு வார்டுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாஜக, அமமுக தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளது.
மேலும் சென்னை மாநகராட்சியில் 5 சுயேச்சைகள் வென்றனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கவுன்சிலர்கள் பங்கேற்று வாக்களிப்பர்.

திமுக கூட்டணி
அந்த வகையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடம் போக மீதமுள்ள மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்களை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மேயர் பதவிக்கு ஆர் பிரியா ராஜன் போட்டியிடுகிறார்.

யார் இந்த பிரியா ராஜன்
இவர் 74 ஆவது வார்டு திருவிக நகரில் போட்டியிட்டவர். எம்காம் பட்டதாரி. திருமணமாகாதவர். தலித் சமூகத்தை சேர்ந்தவர். மிக இளம் வயதில் மேயராகும் வாய்ப்பை பிரியா பெற்றுள்ளார். 18 வயதில் திமுகவில் இணைந்தவர் பிரியா ராஜன். இவரது தந்தை ஆர் ராஜன். இவர் அந்த பகுதியின் திமுக இணை செயலாளர் ஆவார். இவர்களது குடும்பமே 40 ஆண்டுகளாக திமுகவின் விசுவாசியாக உள்ளனர். இவர் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்ததவர். பிரியா ஜார்ஜ் டவுனில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தவர். இதுகுறித்து பிரியா ராஜன் கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலில் வென்று முதல்வராகியுள்ள ஸ்டாலின் தற்போது நிறைய வித்தியாசமான மாற்றங்களை செய்து வருகிறார். அதில் நானும் பங்கு கொள்ள வேண்டும் என விரும்பினேன். எங்கள் ஏரியா மக்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். குடிநீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் வருகிறது. சாலை வசதிகள் சரியில்லை. மின்சார இணைப்பு இல்லாமலும் வீடுகள் உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும் என பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு
இதுவரை மேயர்களாக இருந்த ஸ்டாலினும் மா சுப்பிரமணியனும் தென் சென்னையை சேர்ந்தவர்கள். ஆனால் வடசென்னையை சேர்ந்த ஒருவர் மேயராக இருந்ததில்லை. இதனால் இந்த முறை வடசென்னையை சேர்ந்த பிரியாராஜன், கொளத்தூர் 70 ஆவது வார்டை சேர்ந்த ஸ்ரீதானு சந்திரசேகர் ஆகியோரில் ஒருவருக்கு மேயர் பதவி கொடுக்க திமுக தலைமை பரிசீலனை செய்து வந்தது.

சென்னை மாநகராட்சி மேயர்
இதில் தற்போது பிரியா ராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வெற்றி பெற்றுவிட்டால் சென்னையின் மூன்றாவது பெண் மேயர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முதல் பெண் மேயர், வடசென்னையின் முதல் மேயர் உள்ளிட்ட பெருமைகளை பிரியா ராஜன் பெறுவார். 323 ஆண்டு கால சென்னை மாநகராட்சியின் முதல் குடிமகள் என்ற பெருமையும் பிரியா ராஜனுக்கு வந்து சேரும்.












Click it and Unblock the Notifications