பாஜக தலைவர் பதவி யாருக்கு..? மறுபடியும் பரபரப்பு.. டெல்லியை வட்டமடிக்கும் தமிழக நிர்வாகிகள்..!
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் பதவிக்காலம் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்ட நிலையில், புதிய தலைவரை நியமிப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது பாஜக தேசியத் தலைமை.
தமிழகத்தில் அடுத்தடுத்து உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், வரவுள்ளதால் வலுவான தலைவரை களமிறக்க வேண்டும் என நினைக்கிறாராம் அமித்ஷா.
அதனால் அவசரப்பட்டு புதிய தலைவரை நியமனம் செய்யாமல், யாரை நியமித்தால் கட்சிக்கு பலம் சேர்க்க முடியும் என அலசி ஆராயும் பணிகள் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறுகிறது.
இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன், முருகானந்தம், பி.டி.அரசகுமார், ஹெச்.ராஜா போன்றோர் மாநிலத் தலைவர் பதவியை பிடித்து விட முட்டி மோதி வருகின்றனர்.
வானதி சீனிவாசனுக்கு தலைவர் பதவி மீது ஒரு கண் இருந்தாலும், மீண்டும் பெண் தலைவரை நியமிக்க வாய்ப்பு குறைவு என்ற களயதார்த்தத்தை உணர்ந்துள்ளால் சற்று ஒதுங்கியே உள்ளார்.
இதனிடையே, தலைவர் பதவிக்காக ஆளாளுக்கு ஒரு சிபாரிசை தேடி டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள் தமிழக பாஜக முன்னணி நிர்வாகிகள். ஹெச்.ராஜா மீது பல்வேறு சர்ச்சைகள் உள்ளதாலும், கட்சிக்கு பி.டி.அரசக்குமார் புதுவரவு என்பதாலும் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
சி.பி.ராதாகிருஷ்ணன், முருகானந்தம் ஆகியோர் தான் தற்போதைய நிலவரப்படி ரேஸில் உள்ளார்கள். இடையில் கொஞ்சம் டல்லடித்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. புதிதாக வரும் தலைவராவது தாமரையை தமிழகத்தில் மலர வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.