மத்தியில் கலக்கும் மதுரை பெண்.. யார் இந்த நிர்மலா சீதாராமன்? ராஜீவ் காந்தி மறைவால் சந்தித்த கஷ்டம்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்திராத 10 தகவல்களை தற்போது காண்போம்.
Recommended Video
இன்று தனது 63 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
1. பாஜக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன் மத்திய இணையமைச்சராக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து மோடி 2.O அமைச்சரவையில் நாட்டின் முதல் முழு நேர நிதியமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
2. மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன், திருச்சி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் வணிகவியல் படித்தார். அதன்பின்னர் டெல்லி சென்ற அவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்தார்.
3. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தபோது ஆந்திராவை சேர்ந்த தனது கணவர் பரகலா பிரபாகரை சந்தித்த அவர் 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு பரகலா வங்மாயி என்ற மகள் உள்ளார்.
4. இவரது கணவர் பரகலா பிரபாகரின் குடும்பம் காங்கிரஸ் கட்சியின் பின்னணியை கொண்டது.
5. முழு நேர அரசியலில் அறிமுகமாவதற்கு முன்பாக லண்டனில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார் நிர்மலா சீதாராமன்.
6. பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் (PWC) நிறுவனத்தில் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுத் துறையின் மூத்த மேலாளராக பணிபுரிந்தார் நிர்மலா சீதாராமன்.
7. 1991 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய அவர், ஆந்திராவில் உள்ள தனது கணவரின் கிராமமான நரசாபுரத்தில் தங்கினார். 2008 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, அக்கட்சியின் 2 வது பெண் செய்தித் தொடர்பாளர் ஆனார்.
8. ஆந்திராவில் உள்ள தனது கணவரின் கிராமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறார் நிர்மலா சீதாராமன்.
9. கிளாசிக் இசையில் அதிக ஆர்வம் கொண்டவரான நிர்மலா சீதாராமன், ஏராளமான பாடல்களை சேகரித்து வைத்துள்ளாராம்.
10. சென்னை மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் குழந்தை பெற்ற சமயத்தில்தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனால் 3 நாட்கள் மருத்துவமனையைவிட்டு வெளியேற முடியாமல் முடங்கிய அவரை மருத்துவர், காரில் வெள்ளை கொடி கட்டி ஏற்றிச்சென்று வீட்டில் விட்டிருக்கிறார்.