யார் இந்த ஜெகத்ரட்சகன்? வன்னியர் சமுதாய மக்களுக்காக தனியார் வங்கி தொடங்கும் திட்டம் என்னாச்சு?
சென்னை: திமுகவின் கஜானாக்களில் ஒன்றாக திகழக்கூடிய ஜெகத்ரட்சகன் எம்.பி. வருமான வரித்துறை சோதனை மூலம் இன்று மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்திருக்கிறார்.
கருணாநிதியால் ஆழ்வார் என்றழைக்கப்பட்ட ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் ஒன்றையும் நிறுவி நடத்தி வருகிறார். ஆன்மிகத்தில் அளவுகடந்த ஈடுபாடு கொண்ட இவர் அதிமுக, திமுக, சிறிது காலம் தனிக்கட்சி என அரசியலில் பல்வேறு பரிணாமங்களை பெற்றவர் ஆவார்.

விழுப்புரம் மாவட்டம் கலிங்கமலை என்ற சின்னஞ்சிறு கிராமத்தை பூர்விகமாக கொண்ட ஜெகத்ரட்சகனுக்கு சிறுவயதிலேயே தொழில்கள் செய்வதற்கு ஆர்வம். அதுமட்டுமல்ல கூடவே அரசியல் ஆசையும். ஜெகத்ரட்சகனின் இந்த இரண்டு கனவுகளையும் நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர். எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளை கொடுத்து ஜெகத்தை அரசியலில் லிஃப்ட் செய்துவிட்டவர் எம்.ஜி.ஆர்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற முதுமொழிக்கு ஏற்ப மதுபான ஆலை, மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதி, என கணக்குவழக்கு இல்லாமல் தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தினார் ஜெகத்ரட்சகன். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு திமுகவில் ஐக்கியமானவர் பிறகு அங்கிருந்தும் வெளியேறி வன்னியர் சமுதாய மக்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தி ''வீரவன்னியர் பேரவை'' என்ற அமைப்பை தனியாக தொடங்கி நடத்தினார்.
நாடார் சமுதாய மக்களின் தொழில் வளர்ச்சிக்காக தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை போலவே, வன்னியர் சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக தனியார் வங்கி ஒன்றை நிறுவும் திட்டத்தையும் அப்போது வகுத்தார் ஜெகத்ரட்சகன். ஆனால் என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, அந்த திட்டத்தை அப்படியே அன்று கைவிட்டுவிட்டார் ஜெகத்ரட்சகன்.
மேடைகளில் ஜெகத்ரட்சகன் பேசத் தொடங்கினால் அருவி போல் கொட்டும் அவரது தமிழ் சொல்லாடல்கள் தமிழறிஞர்களையும் வியப்படைய செய்யும். அப்படியொரு ஆற்றலும் மேடைப் பேச்சு வசீகரமும் ஜெகத்ரட்சகனுக்கு உண்டு. நரசிம்மர் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் கொண்ட ஜெகத்ரட்சகன் ஆன்மிக பணிகளுக்கு மறுப்பே சொல்லாமல் டொனேஷனை வாரி வழங்கக்கூடியவர்.
தனது அமைப்பை ஒரு கட்டத்தில் திமுகவில் இணைத்து மீண்டும் கருணாநிதியின் அபிமானியாக வலம் வந்தார் ஜெகத்ரட்சகன். அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியதுடன் மத்திய இணை அமைச்சராகவும் ஆக்கினார் கருணாநிதி.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மிக நெருங்கிய நண்பர் ஜெகத்ரட்சகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை சென்னையின் முக்கிய ஹோட்டல்களில் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டே துரைமுருகனும், ஜெகத்ரட்சகனும் மணிக்கணக்கில் மனதில் உள்ளதை மனம் விட்டு பேசுவார்கள். துரைமுருகன் அமைச்சராகிய பிறகு தான் அது போல் வெளியே சென்று பேசுவதில்லை.












Click it and Unblock the Notifications