ஸ்டாண்ட் அப் காமெடியன் to ஞானவழி காட்டும் குருஜி மகா விஷ்ணு.. அமைச்சர்களுடன் நெருக்கம்? யார் இவர்?
சென்னை: சென்னையில் அரசுப் பள்ளிகளில், மகா விஷ்ணு என்ற இளைஞர் ஆன்மீக போதனை வகுப்புகளை நடத்தி வருவது சர்ச்சையாக வெடித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆன்மீக போதனை நடத்தும் இந்த மகா விஷ்ணு, தமிழக அமைச்சர்கள் பலரையும் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
அண்மையில், கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம்களை நடத்தி போலி என்.சி.சி பயிற்சியாளர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் இளைஞர், சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் ஆன்மீக வகுப்புகள் நடத்தி வருவது பெரும் சர்ச்சையாக கிளம்பியுள்ளது.

ஞானம் போதிக்கும் வகுப்பு: திராவிட மாடல் ஆட்சி என தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அறிவியல்பூர்வமற்ற சிந்தனைகளை மாணவ மாணவிகள் மனதில் விதைத்து, அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் செயலில் ஈடுபடுவதை தமிழக அரசு அரசுப் பள்ளிகளிலேயே அனுமதிக்கலாமா என நெட்டிசன்கள், பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
ஸ்டாண்ட் அப் காமெடியன்: திருப்பூர் மாவட்டத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இந்த மகா விஷ்ணு. சிறு வயதில் முன்னணி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மதுரை மகா என்ற பெயரில் கலக்கியுள்ளார். அவரது பேச்சாற்றல் பலரையும் கவர்ந்த நிலையில் தற்போது வளர்ந்து தனது பாதையை மாற்றியுள்ளார் இந்த மகா விஷ்ணு.

கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம், ஆன்ம தேடலுக்கு வழிகாட்டுவதாக கூறி கட்டண வகுப்புகளை நடத்தி வருகிறார். அவரவர் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு தீர்வும் தருகிறாராம் இந்த கலியுக மகாவிஷ்ணு.

பரம்பொருள் மகாவிஷ்ணு: ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி அளித்தல், பள்ளி கட்டிடங்களை சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தல் ஆகியவற்றை மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் பல இடங்களுக்கும் சென்று ஆன்மீக வகுப்பு எடுத்து வரும் மகா விஷ்ணு, இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று ஸ்ட்ரெஸ் ரிலீஃப் வகுப்புகளை எடுத்து வருகிறார். மேலும் குருவின் கருணை என்ற பெயரில் ருத்ராட்சம், கருங்காலி, நினைத்ததை நிறைவேற்றும் விநாயகர் சிலை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார். தற்போது, அரசுப் பள்ளிகளில் ஆன்மீக தேடல் சொற்பொழிவுகளை ஆற்றத் தொடங்கி இருப்பதால் பிரச்சனை பூதாகரமாகி உள்ளது.
அமைச்சர்களுடன் சந்திப்பு: குருஜி மகா விஷ்ணு என அழைக்கப்படும் இவர், தமிழக அமைச்சர்கள் பலரையும் சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் காணக் கிடைக்கின்றன. பள்ளிக் குழந்தைகள் உள்ளத்தில் அறக் கருத்துகளை விதைக்கும் நோக்கத்தில், தமிழகப் பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய "திருவருட்பா"வைச் சேர்க்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார் மகா விஷ்ணு.

அதேபோல இதே கோரிக்கையுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி்.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோரையும் நேரில் சந்தித்து மனு கொடுத்து, தனது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஆயத்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
அமைச்சர்களைச் சந்தித்தபோது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் மகா விஷ்ணு. இந்நிலையில் தான் தற்போது, ஞானப்பாதைக்கு வழிகாட்டுகிறேன் எனக் கூறி அரசுப் பள்ளிகளில் தனது போதனை வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளார். இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications