Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஏஎஸ் ஆன நிஜ “சூப்பர் வுமன்”.. உயிரை பணயம் வைப்பதே அன்றாட வேலை.. யார் இந்த பிரியா ரவிச்சந்திரன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீயணைப்புத் துறையின் முதல் பெண் அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன், ஐஏஎஸ் (Non State Civil Service) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். உயிரைப் பணயம் வைத்து ரிஸ்க் எடுப்பதே இவரது அன்றாட வேலை. யார் இந்த 'சூப்பர் வுமன்'?

சேலத்தைச் சேர்ந்த பிரியா, கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இந்தியாவிலேயே தீயணைப்பு மற்றும் மீட்பு படையில் சேர்க்கப்பட்ட முதல் பெண் அதிகாரிகள் இருவரில் இவரும் ஒருவர். தீயணைப்புத் துறையில் சிறப்பான வகையில் பணியாற்றி இணை இயக்குநராக உயர்ந்தார். குரூப் 1 அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட சில காலி இடங்களுக்கு மாநில அரசின் பரிந்துரைப்படி, ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்படுவார்கள். அதன்படி, 2022 கேடரில் காலியாக உள்ள இடத்திற்கு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் பிரியா ரவிச்சந்திரன்.

Who is this Super Woman Priya Ravichandran

தீயணைப்பு துறையின் வட மண்டல இணை இயக்குநராக பதவி வகித்து வரும் பிரியா ரவிச்சந்திரன் மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் (Non State Civil Service) ஒதுக்கீட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த ஒரு அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

யார் இந்த பிரியா?: சேலத்தைச் சேர்ந்த பிரியா ரவிச்சந்திரன், சேலத்தில் பள்ளிப்பையும், சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும், எம்.ஃபில் பட்டமும் பெற்றார். தனது 24 வயதில் அதாவது 1999ஆம் ஆண்டில் குரூப் 1 பணிக்கு தேர்ச்சி பெற்றார்.

2003ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசில் குரூப் 1 அலுவலராக, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறையில் முதன் முதலில் தனது பணியை நாகப்பட்டினத்தில் தொடங்கினார் பிரியா. தீயணைப்பு படை அலுவலராக வேலைக்குச் சேரும்போது, பிரியா 2 மாத கைக்குழந்தைக்குத் தாயாக இருந்தார். இருப்பினும், தீயணைப்புத் துறையில் பணியாற்றுவதற்குத் தேவையான கடுமையான உடல் பயிற்சிகளை மேற்கொண்டார்.

Who is this Super Woman Priya Ravichandran

தீயணைப்பு பணியில் கில்லி: இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற தீ பயிற்சி கல்லூரியிலும் பயின்றார். பல்வேறு இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். கோவை மண்டலத்திலும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கோட்ட அலுவலராக பணியாற்றியுள்ளார் பிரியா. கோவையில் ஒரு கட்டிட இடிபாடுகளில் மீட்புப் பணியில் சிறப்பாகச் செயலாற்றியதற்காக மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார்.

பின்னர், சென்னையில் தீயணைப்பு துறையின் மத்திய சென்னை கோட்ட அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார் பிரியா ரவிச்சந்திரன். 2012 ஜனவரியில், பொங்கல் பண்டிகையின்போது, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழம்பெருமை வாய்ந்த முக்கியமான அரசு கட்டிடமான எழிலகத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தனது படையினருடன் பிரியா அந்த இடத்திற்கு விரைந்தார்.

எழிலகம் தீ விபத்தில் படுகாயம்: தீயை அணைக்க தீ அணைப்பு இயந்திரங்கள் ஒரு பக்கம் போராடினாலும், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ எந்தப் பக்கம் இருந்து பரவத் தொடங்கியது என்பதை அறிந்தால் தான் தீயை விரைந்து அணைக்க முடியும் என்பதால், தனது உயிரையே பணயம் வைத்து, எரியும் நெருப்புக்குள் புகுந்தார் பிரியா. தீயணைப்பு நடவடிக்கையின்போது மேற்கூரை விழுந்து படுகாயமடைந்தார் பிரியா.

முடிவில், 15 தீயணைப்பு வாகனங்கள், 30க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் என 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் ஐந்து மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். மின் கசிவுதான் தீ விபத்துக்கு மிக முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது.

வீர தீர விருது: படுகாயமடைந்த பிரியா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். பிரியாவின் துணிச்சலான செயலை அங்கீகரிக்கும் விதமாக, 2012ஆம் ஆண்டு அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் இவருக்கு வீர தீர செயலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கமும் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் பதக்கம் பெற்ற முதல் பெண் அதிகாரியும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தன்னலமற்ற சேவை புரிந்ததற்காக தமிழக முதல்வர் விருது கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் வடக்கு மண்டல இணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். இத்தகைய பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தபோது மீட்புப் பணியில் இவரது மேற்பார்வை மற்றும் பணியினை கண்ட பொதுமக்களும், அதிகாரிகளும் இவரது பணியினை வெகுவாக பாராட்டினர்.

Who is this Super Woman Priya Ravichandran

இதுதான் வெகுமதி: பல பேரிடர் நிகழ்வுகளின் போது களத்தில் நின்றுள்ளார் பிரியா. மணப்பாறை அருகே சுஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சம்பவத்தின்போது மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார். சென்னை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் எஸ். ரவிச்சந்திரன், பிரியாவின் கணவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரியா பணியில் சேர்ந்த சிறிது காலத்தில் ஒரு கட்டுமான பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்து கோயில் வளாகத்தில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். சிமென்ட் ஈரமாக இருந்ததால், அது காய்வதற்குள் விரைவாக செயல்பட வேண்டிய நிலை, சிமெண்ட் காய்ந்து விட்டால் மீட்பது சிக்கலாகிவிடும். ஒரு தொழிலாளி அவரது இடுப்பு வரை சிமெண்டில் மாட்டிக்கொண்டார். உடனடியாக உயிரைப் பணயம் வைத்து உள்ளே இறங்கிக் காப்பாற்றினார் பிரியா.

"அப்போது உயிர் பிழைத்தவரின் குடும்பத்தில் ஒருவரைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீருடன் எனக்கு நன்றி தெரிவித்தனர். அதுதான் நான் விரும்பும் வெகுமதி." என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பிரியா ரவிச்சந்திரன். இந்த ரியல் சூப்பர் வுமனுக்கு இன்னும் பல வெகுமதிகள் கிட்டட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+