யார் இந்த விஜயதரணி? கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உறவினர்! மாணவர் காங்கிரஸ் டூ பாஜக! கடந்து வந்த பாதை
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இன்று ஐக்கியமாகியுள்ளார்.
இந்நிலையில் விஜயதரணி என்பவர் யார், அவர் கடந்து வந்த அரசியல் பாதை குறித்தெல்லாம் இங்கே பார்க்கலாம்.

விஜயதரணிக்கு கடந்த 2011ஆம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் சீட் கிடைத்த போது, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி என்ற அடையாளத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் தான், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி கிடையாது, அவரது தூரத்து உறவினர் விஜயதரணி என்பது தெரியவந்தது. 1987ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் பயின்ற போதே மாணவர் காங்கிரஸில் இணைந்தவர் விஜயதரணி.
சட்டப்படிப்பிலும் கெட்டிக்காரர் என்பதால் ப.சிதம்பரத்தின் மனைவியும் மூத்த பெண் வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திடன் ஜீனியராக சேர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் பிராக்டிஸ் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் தனியாக அலுவலகம் அமைத்து வழக்கறிஞர் தொழிலில் கொடிக்கட்டிப் பறக்க ஆரம்பித்தார். இந்தக் காலக்கட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பெரிதாக தலைக்காட்டியதில்லை. அந்தளவுக்கு பிசியான வழக்கறிஞராக திகழ்ந்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிய போது லட்சங்களில் கட்டணம் வசூலித்தார். என்னதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் எம்.எல்.ஏ., எம்.பி. ஆக வேண்டும் என்ற கனவும் அவருக்குள் இருந்தது.
அந்த வகையில் ப.சிதம்பரம் சிபாரிசில் கடந்த 2011ஆம் ஆண்டு விளவங்கோடு தொகுதியில் சீட் வாங்கி காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார். இவரது கணவர் சிவக்குமார் கென்னடி குமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இதனால் விஜயதரணி என்ற தனது பெயரோடு விஜயதரணி கென்னடி என 2011 தேர்தலின் போது சுவர் விளம்பரங்கள் கொடுத்தார். கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ள தொகுதியான விளவங்கோட்டில் இவரது வெற்றி எளிதானது. 2016 சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் விஜயதரணிக்கு சீட் கொடுக்க எதிர்ப்புகள் கிளம்பின.
ஆனால் தனது டெல்லி லாபி மூலம் 2வது முறையாக விளவங்கோடு தொகுதியில் சீட் வாங்கி வெற்றிபெற்றார். இதனிடையே 2019 மக்களவைத் தேர்தலின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் சீட் எதிர்பார்த்து கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வசந்தகுமாருக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இதையடுத்து வசந்தகுமார் மறைவுக்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.பி.சீட் வாங்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதும் அந்த முயற்சியில் தோல்வி மட்டுமே மிஞ்சியது. விஜய் வசந்துக்கு காங்கிரஸ் மேலிடம் எம்.பி.சீட் கொடுத்தது.
இதையடுத்து வேண்டாத வெறுப்பாக விளவங்கோடு தொகுதியில் 3வது முறையாக எம்.எல்.ஏ. சீட் வாங்கினார் விஜயதரணி. ஆனால் அதற்கும் கட்சியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. விஜயதரணிக்கு சீட் கொடுக்கக் கூடாது என சத்தியமூர்த்தி பவனில் தர்ணா போராட்டங்கள் எல்லாம் நடந்தது. கே.எஸ்.அழகிரி தான் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என 3வது முறை எம்.எல்.ஏ. சீட் கொடுத்தார். அதில் ஹாட்ரிக் வெற்றிபெற்றார். அது தனிக்கதை.
சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் பதவி, மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி என வரிசையாக மூன்று பதவிகளை எதிர்பார்த்தார் விஜயதரணி. ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் இனியும் காங்கிரஸில் இருப்பதா என்ற ஆதங்கத்தில் இன்று பாஜகவில் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டார்.
கம்யூனிஸ்ட் கோட்டையாக திகழ்ந்த விளவங்கோட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், சட்டமன்ற விவாதங்களிலும், ஊடக விவாதங்களிலும் பாயிண்ட்களை அடுக்கி பேச ஆரம்பித்தார். தாம் நெருப்பு என்றும் தனது பக்கத்தில் பாஜக நெருங்கக் கூட முடியாது என்பன உள்ளிட்ட பல வசனங்கள் கடந்த காலங்களில் விஜயதரணி பேசியதாகும்.












Click it and Unblock the Notifications