சென்னை மெரினாவில் வந்த கார்.. அள்ள அள்ள வந்த 18 கோடி ரூபாய் தங்கம்.. யாருக்கு சொந்தம் தெரியுமா?
சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அண்ணா சதுக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று திடீரென காமராஜர் சாலையில் இருந்து கீழே இறங்கி சர்வீஸ் சாலையில் இறங்கி சென்றது.. அந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது 28 கிலோ தங்கம் இருந்தது.. அந்த தங்கம் யாருக்கு சொந்தமானது.. அதன் பின்னணி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாகவே சென்னையில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம் ஆகும். குற்றவாளிகளை பிடிக்கவும், திருட்டு வாகனங்களை பிடிக்கவும், மது அருந்திவிட்டு வருவோரை பிடிக்கவும், சந்தேகத்திற்கு உரியவர்களை பிடிக்கவும் இந்த சோதனை ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இடத்தில் போலீசார் பேரிகார்டர் அமைத்து சோதனையில் ஈடுபடுவார்கள்.

அந்த வகையில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி அன்று நள்ளிரவு அண்ணா சதுக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது சாலையில் கார் ஒன்று திடீரென வேகமாக வந்து கொண்டிருந்தது.. அந்த காரை, போலீசார் கவனித்து கொண்டிருந்த போது, திடீரென காமராஜர் சாலையில் இருந்து கீழே இறங்கி சர்வீஸ் சாலையில் போகத் தொடங்கியது. இதனால், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு அந்த கார் மீது சந்தேகம் எழுந்தது.
உடனடியாக அந்த காரை மடக்கி போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையில் காருக்குள் இருந்த ஒரு பையில் ஏராளமான தங்க நகைகள் இருந்தன. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. குறிப்பாக ஜி.எஸ்.டி. வரி கட்டியதற்கான ரசீதும் அந்த பையில் இல்லை.
குறிப்பிட்ட நகைகள் அனைத்தும் பெங்களூரில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து காரில் கொண்டுவரப்பட்ட இருந்தது என்பதை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்தனர். சென்னையில் உள்ள நகைக் கடைகளுக்கு அவற்றை விற்பனை செய்ய கொண்டுவந்ததாக காரில் இருந்த பிரகாஷ் என்பவர் தெரிவித்தார். எனினும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அந்த நகைகளை தனிப்படை போலீசார் வணிக வரித்துறை அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர்.
வணிக வரித்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நகைகளை எடை போட்டு பார்த்தனர். 28 கிலோ நகைள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.18 கோடி ஆகும். அந்த நகைகளை வணிக வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். காரில் வந்த பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரிடம் அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்..பெங்களூருவில் இருந்து சவுகார்பேட்டை, தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக் கடைகளுக்கு சப்ளை செய்ய வந்ததாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications