குடியரசு தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரா.. திமுக சாய்ஸ் யாராக இருக்கும்? எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களில் முதல்வர் ஸ்டாலினின் சாய்ஸ் யாராக இருக்கும் என்பது குறித்து யூகத்தின் அடிப்படையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ளது. அவருக்கு பிறகு அந்த பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டசபை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காத ஒரு வேட்பாளரைத்தான் ஆளும் பாஜக நிறுத்த முயலும்.
அந்த வகையில் தற்போது ரேஸில் இருப்பவர்கள் குடியரசுத் துணைத் தலைவராக உள்ள வெங்கய்ய நாயுடு, தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன். இதில் வெங்கய்ய நாயுடு அனைத்து கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடியவர். வாஜ்பாய் காலத்திலிருந்து பாஜகவில் இருப்பதால் அவருக்கு எதிர்க்கட்சியினரிடமும் செல்வாக்கு உள்ளது. இவர் அந்த ரேஸில் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

களமிறக்க முடிவு
அது போல் பெண் ஒருவரை குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற பேச்சும் அடிபடுகிறது. தென் மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் ஆதரவுடன் தமிழிசை களமிறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஏனெனில் தமிழிசை தமிழர். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர். தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர். ஆக மொத்தம், தமிழிசை ஏறத்தாழ இப்போது பாதிக்கும் மேற்பட்ட தென் இந்தியாவிற்கு பரிட்சையப்பட்ட பிரபலம். இதெல்லாம் தமிழிசைக்கு உள்ள பிளஸ்.

குடியரசுத் தலைவர்
இந்த நிலையில் நேற்றைய தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் எம்பி, முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்த முயற்சியுங்கள். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட எவரும் குடியரசுத் தலைவராக துணை தலைவராக வராமல் தடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் சாய்ஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாய்ஸ் யாராக இருக்கும் என யூகத்தின் அடிப்படையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களில் மிக மதிப்பும் மரியாதையும் உள்ளவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு.

சட்ட போராட்டங்கள்
இவர் தமிழக மக்களின் நலனுக்காக நிறைய சட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார். இவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவரும் கூட. கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர். அனைத்து கட்சியினரிடம் அன்பாக பழகக் கூடியவர். யார் மீது அனாவசியமான விமர்சனங்களை முன் வைக்க மாட்டார். நாங்குநேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்டவர். உயர் ஜாதியினரிடம் இருந்து தங்கள் உரிமைகளை எப்படி பெற வேண்டும் என்பது குறித்தெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர். ஜாதியில்லா சமூகத்தை உருவாக்க பல தியாகங்களை செய்தவர்.

சட்ட போராட்டம்
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு கடந்த 2018இல் வெற்றியும் கண்டவர். மக்கள் பிரச்சினைகளுக்காக 20 நாட்களுக்கு மேல் உண்ணாவிரத போராட்டங்களை தனி ஒருவராக இருந்து நடத்தியவர். சீன தலைநகர் பெய்ஜிங் சென்றபோது கவுரவிக்கப்பட்டார்.

96 வயது
சிறந்த எழுத்தாளர், நல்ல மனிதர், அரசு சலுகைகளை எதிர்பார்க்காதவர். எனவே இவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் நிறுத்த முயலலாம் என தெரிகிறது. நல்லகண்ணுவுக்கு 96 வயது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 35 வயது இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை என்பதால் இவரை நிறுத்துவது சால சிறந்ததாக இருக்கும் என்ற பேச்சு உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அரசு ஆளுநருடன் போராடி வருகிறது. ஒரு வேளை இந்த மசோதா மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் என்று வரும் பட்சத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக இருக்கும் போது அவரது அதிகாரத்திற்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்ற பிளஸும் உள்ளது.

பொறுத்திருந்து பார்க்கலாம்
நல்லகண்ணு தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். ஆனால் அது முடியாத நிலையில் இது போன்ற உயர்பதவிகளில் அவரை உட்காரவைத்தால் அவரது தியாகங்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என்று இணையதளங்களில் கூறுகிறார்கள் மக்கள். பதவி, பணம், புகழுக்கு ஆசைபடாத நல்லகண்ணு இதற்கு ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரம், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கையை பொறுத்து, நாடாளுமன்றத்தில் முழு பெரும்பான்மை உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications