43 ஆண்டுகளாக கோலோச்சிய அன்பழகன்.. திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?
சென்னை: 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராக க அன்பழகன் இருந்து தற்போது மறைந்த நிலையில் அக்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி என்பது தலைவர் பதவியை காட்டிலும் மிகவும் ஆளுமைமிக்க பதவியாகும். இது ஒவ்வொரு கட்சியின் பை-லா விற்கேற்ப மாறுபடும். அந்த வகையில் திமுகவில் பொதுச் செயலாளர் பதவி என்பது அலங்காரப் பதவி அல்ல. அது ஒரு ஆளுமைமிக்க பதவியாகும்.
திமுகவில் உறுப்பினரை சேர்ப்பது, நீக்குவது, சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், கட்சியின் உள்கட்சி தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளரை தேர்வு செய்வது பொதுச் செயலாளர் ஆவார். என்னதான் தலைவர் உள்ளிட்ட சில நிர்வாகிகளால் கலந்தாலோசிக்கப்பட்டு பின்னர் முடிவெடுக்கப்படும் என்ற போதிலும் அதற்கான அறிக்கை பொதுச் செயலாளர் பெயரிலேயே வெளியிடப்படும். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும்.

போட்டி
கட்சியில் முக்கிய முடிவுகளும் அந்த பதவியில் அமருபவர்களாலேயே எடுக்கப்படுகிறது. இத்தகைய பெருமைகள் வாய்ந்த திமுக பொதுச் செயலாளர் பதவியில் 43 ஆண்டுகளாக பேராசிரியர் க அன்பழகன் நீடித்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். இதையடுத்து அப்பதவிக்கு யார் என்பது குறித்த போட்டி இப்போதே நிலவுவதாக தெரிகிறது.

மூத்த தலைவர்கள்
இந்த போட்டிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக எம்பிக்கள் குழுவின் தலைவர் டி ஆர் பாலு, திமுக உயர் மட்ட குழு உறுப்பினர் எ.வ.வேலு, பொன் முடி உள்ளிட்டோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களில் துரைமுருகன், மறைந்த கருணாநிதி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். இவர் 11 முறை எம்எல்ஏவாக இருந்தவர். தற்போதும் காட்பாடி தொகுதியின் எம்எல்ஏ ஆவார். சட்டசபையை பொருத்தவரை எதிர்க்கட்சி துணை தலைவராக உள்ளார். இவரது மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதி எம்பியாக உள்ளார்.

எதிர்ப்பு
அதற்கு அடுத்தாற் போல் டி ஆர் பாலு. இவரும் கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். விசுவாசமானவர். இவர் 7 முறை மக்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போதும் ஸ்ரீபெரும்புதூர் எம்பியாக உள்ளார். மத்தியில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பெட்ரோலிய துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருபவர் டி ஆர் பாலுவே. நீட், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்தவர்.

உள்கட்சி தேர்தல்
அதன் பின்னர் எவ வேலு. திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்டவர். இவர் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர். திமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்தவர். அது போல் பொன் முடி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 5 முறை எம்எல்ஏவாக இருந்தார். இவரது மகன் கவுதம சிகாமணி எம்பியாக உள்ளார். இது போல் மூத்த நிர்வாகிகள் அப்பதவிக்கு போட்டியிடுவதால் உள்கட்சி தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்படுவரா இல்லை போட்டியின்றி யாராவது ஒருவர் தேர்வு செய்யப்படுவரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.












Click it and Unblock the Notifications