"அடிமடியிலேயே".. டெல்லி வரை புகார் போச்சாமே.. கண் சிவந்த லீடர்கள்.. தலைமை மாறுகிறதா.. குஷியில் பாஜக
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது
சென்னை: அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், கேஎஸ் அழகிரி மீதான அதிருப்திகள் மேலிடத்துக்கு பறந்தபடியே உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அந்தந்த மாநில தலைவர் பதவிகளை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரே தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான மாற்றம் குறித்த பேச்சும் பரபரத்து வருகிறது.. ஏற்கனவே ஒருமுறை இப்படி ஒரு பேச்சு எழுந்தது.

அத்தைக்கு மீசை
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியானது குறித்து செய்தியாளர்கள் கேஎஸ் அழகிரியிடமே ஒருமுறை கேட்டிருந்தனர்.. அதற்கு அவர், "அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த பேச்சு மீண்டும் சத்தமாக ஒலிக்க துவங்கி உள்ளது.. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் கதர்களை சுற்றி கொண்டிருக்கிறது.

உருட்டுக்கட்டை
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த உருட்டுக்கட்டை மோதல்களால் ரத்தகளறியானது சத்தியமூர்த்திபவன்... நெல்லை மாவட்ட காங்கிரஸ்காரர்களுக்கு இழைக்கப்பட்ட பதவி அநீதிகளுக்கு நியாயம் கேட்க வந்த சொந்த கட்சிக்காரர்களையே அடித்து உதைக்க அழகிரி உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அழகிரிக்கு எதிராக, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட முன்னாள் நிர்வாகிகள் பலரும் கொதிந்தெழுந்தனர்.

ரத்தக்களறி
அழகிரிக்கு எதிராக இவர்கள் ஓரணியில் திரண்டனர். அதனை வெளிப்படுத்தும் வகையில், அழகிரி தலைமையில் நடந்த நிகழ்ச்சிகளை புறக்கணிக்கவும் செய்தனர்.. இதன் அடுத்தகட்டமாக, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து புகார் கொடுக்க திட்டமிட்டனர். அதன்படி, திருநாவுக்கரசுவை தவிர மற்றவர்கள் நேற்று முன்தினம் டெல்லி சென்று கார்கேவை சந்தித்தனர். அந்த சந்திப்பில், சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல்களுக்கு அழகிரிதான் காரணம் என்றும், கட்சி அலுவலகத்துக்துக்குள் ரவுடிகளை வரவழைத்தது அழகிரிதான் என்றும், காங்கிரசை வேறுபாதையில் வளர்த்து வருகிறார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்கள்.

லிஸ்ட்ஸ்
மேலும், தலைவர் பொறுப்புக்கு அழகிரி வந்து 4 ஆண்டுகாலம் நெருங்குகிறது. இந்த 4 ஆண்டுகளில் கட்சியில் என்னென்ன ஊழல்கள் நடந்துள்ளது என்பதையும் அழகிரிக்கு எதிராக கார்கேயிடம் பட்டியிலிட்டுள்ளனர். இதனையெல்லாம் கேட்ட கார்கே, ''சத்தியமூர்த்திபவனில் நடந்துள்ள மோதல்கள் விரும்பத்தகாதவை. இதனை நான் அங்கீகரிக்கமாட்டேன். அழகிரியிடமும் தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளரான தினேஷ்குண்டுராவிடமும் விசாரிக்கிறேன். நடந்த சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியளித்துள்ளார்.

பின்னடைவு
இதனையடுத்து தொடர்ந்து பேசிய காங்கிரஸ் முன்னாள்கள், ''அண்மைக்காலமாக அழகிரியின் செயல்பாடுகள் சரியில்லை. கட்சியை சாதி சங்கமாக நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர் தலைவர் பதவியில் இருந்தால் கட்சிக்குள் அதிருப்திகளும் ஒத்துழையாமையும்தான் அதிகரிக்கும். அது தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், அழகிரியை மாற்றிவிட்டு, புதிய தலைவரை நியமியுங்கள். இப்போதே நியமித்தால் தான் தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் இருக்கும் நிலையில், கட்சியை ஆரோக்கியமாக புதிய தலைவர் கொண்டு செல்ல நேரம் சரியாக இருக்கும்'' என்று வலியுறுத்தியுள்ளனர்.

கச்சை கட்டு
கார்கேவோ, ''தலைவர் மாற்றத்தை எடுத்தேன்-கவிழ்த்தேன் என்ற பாணியில் செய்திட முடியாது. ஆகட்டும் பார்க்கலாம்'' என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளாராம்.. இதற்கிடையே, சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல் குறித்து கார்கேவுக்கு ரிப்போர்ட் ஒன்றை அனுப்பியுள்ளார் தினேஷ் குண்டுராவ்.. அதில், "இரு தரப்பும் தவறு செய்திருக்கிறது, அதேசமயம் தலைவர் அழகிரி நினைத்திருந்தால் இப்படி ஒரு மோதல்கள் நடக்காமல் தவிர்த்திருக்க முடியும்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளாராம் தினேஷ் குண்டுராவ். ஆக, அழகிரிக்கு எதிராக கச்சை கட்டுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்... என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications