அடுத்த தலைமைச் செயலாளர் யார்? சீனியர் இருக்க "இவருக்கே" வாய்ப்பு அதிகமா? ஸ்டாலினின் சாய்ஸ் யார்?
சென்னை: தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு வரும் ஜூன் 30ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார். அவர் 1988ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார்.

அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் முதலே பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிலரது பெயர்களை ரேஸில் உளளன. அவர்களில் முதலிடத்தில் 1986 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மாவின் பெயர் உள்ளது.
இவர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவராக உள்ளார். அது போல் 1989 ஆம் ஆணடு ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர் பெயரும் ரேஸில் உள்ளது. இவர் தற்போது வருவாய்த் துறையில் நிர்வாக ஆணையராக உள்ளார். மூன்றாவது உள்ளவர்தான் சிவதாஸ் மீனா. இவரும் 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார்.
சிவதாஸ் மீனா தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக உள்ளார். இந்த மூவரில் சிவதாஸ் மீனாவுக்கு அடுத்த தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலாளராக உள்ள இறையன்புவை ஓய்வு பெற வைத்து வீட்டிற்கு அனுப்ப முதல்வருக்கு விருப்பமில்லையாம்.
அவருடைய சேவையை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்கு மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஷகீல் அக்தருக்கு அந்த பதவி வழங்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக இறையன்பு ஓய்வு பெற்றதும் அவர் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு இருந்து வருகிறார். இந்த ஆலோசனையின் முடிவில் புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு ஆளுநருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்படும். இதைத் தொடர்ந்து அவர் ஒப்புதல் அளித்ததும் இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த தலைமைச் செயலாளர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஹன்ஸ்ராஜ் வர்மா சீனியராக இருக்கும் போதிலும் சிவதாஸ் மீனாவுக்கே அதிக வாய்ப்பு என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications