கொரோனா தடுப்பூசி.. யாருக்கு முதலில் செலுத்தப்படும்? எப்படி பதிவு செய்வது? முழு விளக்கம் இதோ
சென்னை: சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசியான, கோவிஷீல்ட்டுக்கு மருந்துகள் கட்டுப்பாட்டாளர் அமைப்பு அவசர கால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கியது. இதேபோல பாரத் பயோடெக்-ஐசிஎம்ஆர் இணைந்து உள்நாட்டில் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிக்கும் இதேபோல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதோ உங்களின் சந்தேகங்களுக்கு, தீர்வுகள்.
கொரோனா தடுப்பூசி பெறுவதன் நன்மைகள் என்ன?
கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால், நோய்வாய்ப்படாமல் இருக்க தேவையான அளவுக்கு, உங்கள் உடலில் ஆன்டிபாடி உருவாகும். கொரோனாவிலிருந்து இது உங்களைப் பாதுகாக்க உதவும்.
தடுப்பூசிகள் எவ்வளவு பாதுகாப்பானவை?
தடுப்பூசிகள் ஆரோக்கியமான நபர்களிடம் பரிசோதிக்கப்பட்டன. இணை நோய்களை கொண்ட, பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் உள்ளவர்களிடமிருந்து தடுப்பூசி செயல் திறன் பற்றி கூடுதல் தகவல்கள் பெறப்பட வேண்டியுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசிக்கு எவ்வளவு கட்டணம்?
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இந்த தடுப்பூசியை அரசுக்கு 440 ரூபாய் (சுமார் $ 3) மற்றும் தனியார் சந்தைக்கு சுமார் 700-800 ரூபாய் விலையை நிர்ணயிக்கும் என்று கூறியுள்ளது. பாரத் பயோடெக் தடுப்பூசிக்கு ரூ .350 விலை நிர்ணயம் செய்யப்படும்.
கோவிட் தடுப்பூசி எப்போது?
கொரோனா தடுப்பூசியை ஜனவரி 16ம் தேதி முதல் அறிமுகப்படுத்த இந்திய அரசு தயாராக உள்ளது. மேலும் தகவல்களுக்கும் அப்டேட்டுகளுக்கும் www.mohfw.gov.in ஐப் பார்வையிடவும்.
முதலில் கொரோனா தடுப்பூசி யாருக்கு கிடைக்கும்?
தடுப்பூசி போடப்பட வேண்டிய, முன்னுரிமை குழுக்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. முதல் குழுவில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் உள்ளனர். கொரோனா தடுப்பூசி பெறும் இரண்டாவது குழு, 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களாக இருப்பார்கள்.
பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசி செலுத்திய தன்னார்வலர் பலி.. வெளிப்படையாக தெரிவிக்காதது ஏன்? சர்ச்சை
தடுப்பூசி போடுவது கட்டாயமா?
கொரோனாவுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் இல்லை. தனி நபர் விருப்பம் அடிப்படையிலானது. ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வது தனி நபர் மற்றும் சமூகத்திற்கு நல்லது என்கிறது அரசு.
தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டு குறுகிய காலத்தில் அறிமுகப்படுத்தப்படுவதால் அது பாதுகாப்பாக இருக்குமா?
தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குமுறை அமைப்புகள் பரிசோதித்த பிறகே நாட்டில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படும். எனவே பாதுகாப்பானதுதான்.
ஏற்கனவே கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் நபருக்கு தடுப்பூசி போட முடியுமா?
உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் நோய்த்தொற்றுடைய நபர் தடுப்பூசி போடும் இடத்தில் மற்றவர்களுக்கு அதை பரப்பும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இந்த காரணத்திற்காக, பாதிக்கப்பட்ட நபர்கள் உடல் நிலை சரியான 14 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
கொரோனாவிலிருந்து மீண்ட ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியமா?
ஆம்.. கொரோனா நோய்த்தொற்றின் கடந்த கால பாதிப்பை பொருட்படுத்தாமல் தடுப்பூசியின் முழுமையான ஷெட்யூலைப் பெறுவது நல்லது. இது நோய்க்கு எதிராக வலுவான நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவும்.
பல தடுப்பூசிகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது?
தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவுகள், நம் நாட்டின் மருந்து கட்டுப்பாட்டாளரால் ஆராயப்படுகின்றன. எனவே, உரிமம் பெறும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் ஒப்பிடக்கூடிய பாதுகாப்பு மற்றும் செயல்திறனைக் கொண்டிருக்கும். இருப்பினும், ஒரே வகை தடுப்பூசியைத்தான் ஒருவர் போட வேண்டும். ஒருமுறை ஒரு தடுப்பூசியையும், சில நாட்கள் கழித்து அடுத்த கோர்ஸ் எடுக்கும்போது வேறு கம்பெனி தடுப்பூசியும் போடக்கூடாது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மருந்துகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும்?
ஆம். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட COVID 19 தடுப்பூசி மற்ற நாடுகளால் உருவாக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் போலவே பயனுள்ளதாக இருக்கும். தடுப்பூசி சோதனைகளின் பல்வேறு கட்டங்கள் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு குப்பியில் 10 தடுப்பூசி... 4 மணி நேரத்தில் யூஸ் செய்யவில்லை என்றால் அத்தனையும் வேஸ்ட்
தடுப்பூசிக்கு நான் தகுதியானவனா என்று எனக்கு எப்படித் தெரியும்?
ஆரம்ப கட்டத்தில், கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பெற்றவர்களுக்கும், சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி கிடைப்பதன் அடிப்படையில், 50க்கு மேற்பட்ட வயதுடையவர்களும் ஆரம்பத்திலேயே தொடங்கலாம். தடுப்பூசி வழங்கப்படும் வசதி மற்றும் அதற்கான திட்டமிடப்பட்ட நேரம் குறித்து தகுதியான பயனாளிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு தெரிவிக்கப்படும்.
ஒரு நபர் சுகாதாரத் துறையில் பதிவு செய்யாமல் தடுப்பூசி பெற முடியுமா?
இல்லை, கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வது கட்டாயமாகும். பதிவுசெய்த பின்னரே சைட் விசிட் பற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.
தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி?
உங்கள் ஸ்மார்ட்போனில் COWIN செயலியை பதிவிறக்கவும். அரசாங்க புகைப்பட அடையாள அட்டையை பதிவேற்றவும் அல்லது AADHAARஅங்கீகாரத்தை செய்யவும். பயோமெட்ரிக்ஸ், ஓடிபி வழியாக அங்கீகாரம் செய்யப்படும். பதிவுசெய்ததும், தடுப்பூசிக்கு தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்படும். நேரடியாக சென்று யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாது. முன் பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் மட்டுமே தடுப்பூசி போட அனுமதிக்கப்படுவார்கள்.
தகுதியான பயனாளியை பதிவு செய்ய என்ன ஆவணங்கள் தேவை?
புகைப்படத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஐடி எதையாவது பதிவு செய்ய பயன்படுத்தலாம்:
• ஓட்டுநர் உரிமம், தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டம் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) வேலை அட்டை
• எம்பி, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
• பான்கார்டு, வங்கி / தபால் அலுவலகம் வழங்கிய பாஸ்புக்குகள்
• பாஸ்போர்ட்
• ஓய்வூதிய ஆவணம், மத்திய / மாநில அரசு / பொது லிமிடெட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய சேவை அடையாள அட்டை
• வாக்காளர் ஐடி
தடுப்பூசி போட வேண்டிய தேதி குறித்த தகவல்களை பயனாளி எவ்வாறு பெறுவார்?
ஆன்லைன் பதிவைத் தொடர்ந்து, பயனாளி தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உரிய தேதி, இடம் மற்றும் தடுப்பூசி குறித்த நேரம் ஆகியவற்றைப் பெறுவார்.
புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஒருவர் மருந்துகளை உட்கொண்டால், அவர் தடுப்பூசி எடுக்க முடியுமா?
ஆம். இந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணை நோய்கள் இருந்தாலும் அந்த நபர்கள் முன்னுரிமை நபர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் தடுப்பூசி பெற வேண்டும்.
கொரோனா தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்ன?
பாதுகாப்பு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே கோவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும். மற்ற தடுப்பூசிகளைப் போலவே, சில நபர்களுக்கு பொதுவான பக்க விளைவுகளாக லேசான காய்ச்சல், வலி போன்றவை இருக்கலாம்.
ஆன்டிபாடிகள் எப்போது உருவாகும்? முதல் டோஸ் எடுத்த பிறகு, இரண்டாவது டோஸ் எடுத்த பிறகு, அல்லது பின்னரா?
கொரோனா தடுப்பூசியின் 2 வது டோஸ் பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகளின் பாதுகாப்பு அளவுகள் உருவாக்கப்படுகின்றன.
டோஸ் அளவு என்னவாக இருக்கும்?
தடுப்பூசியின் இரண்டு டோஸ் 28 நாட்கள் இடைவெளியில் எடுக்கப்பட வேண்டும். ஆன்டிபாடிகளின் பாதுகாப்பு பொதுவாக இரண்டாவது டோஸுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு உருவாகும்.
தடுப்பூசிகள் நீண்டகால பாதுகாப்பை வழங்குமா?
கொரோனா தடுப்பூசிகள் நீண்டகால பாதுகாப்பை அளிக்குமா என்பதை அறிந்து கொள்வது இப்போதைய நிலையில் முடியாதது.
தடுப்பூசிக்குப் பிறகு நீங்கள் கொரோனாவை பரப்ப முடியுமா?
தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நேரம் எடுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தடுப்பூசிக்கு சற்று முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னர் ஆண்டிபாடி உருவாக தேவையான கால நேரத்திற்குள்ளோ ஒரு மனிதர் கொரோனா பரவலுக்கு இலக்காக கூடாது. அப்படி பழக நேரிட்டால், கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும்.
கோவிட் -19 தடுப்பூசிகளை மிக்ஸ் செய்ய முடியுமா?
இல்லை, மக்கள் தங்கள் முதல் மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசி டோஸ்களை வெவ்வேறு நிறுவனத்திடமிருந்து பெற முடியாது. ஏனென்றால், தடுப்பூசிகள் ஒரே வைரஸிலிருந்து உங்களை பாதுகாக்கின்றன, ஆனால் தடுப்பூசிகள் ஒரே மாதிரியாக இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 'ஒன்றோடொன்று மாறக்கூடியவை அல்ல' என்றும், 'கலப்பு-தயாரிப்பு டோஸ்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படவில்லை' என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளன. எனவே இரண்டு டோஸ்களையும் ஒரே நிறுவன தயாரிப்பிடமிருந்து போட்டுக் கொள்ளப்பட வேண்டும்.