கூட்டத்திற்கு வராத திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர்.. காரணம் என்ன? - ஜெயக்குமார் பரபர விளக்கம்!
சென்னை : இன்று நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 5 பேர் மட்டுமே பங்கேற்கவில்லை என்றும், பங்கேற்காதவர்கள் கடிதம் அளித்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் மொத்தமுள்ள 74 பேரில் 65 பேர் பங்கேற்றுள்ளனர். 4 பேர் வராத காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தலைமை கழக நிர்வாகிகள்
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் மிகத் தீவிரமாக நிலவி வரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் நடத்தும் திட்டத்தில் இருக்கிறார். இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி பங்கேற்பில் நடந்தது. தனது கையெழுத்து இல்லாமல் அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்படும் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

ஓபிஎஸ்ஸூக்கு எதிராக
இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஓ.பன்னீர்செல்வம் வகிக்கும் ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்கனவே காலாவதியானதாக ஈபிஎஸ் தரப்பினர் கூறிய நிலையில், பொருளாளர் பதவியில் இருந்தும் அவரை நீக்கவிருப்பதாக கூறப்பட்டது. மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

ஜெயக்குமார்
இன்று நடைபெற்ற அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுகவை வழிநடத்த சட்ட விதிகளின்படி தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை கூட்டினார். 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் இந்த தலைமைக் கழக கூட்டத்திற்கு வர முடியவில்லை என்று கடிதம் அளித்திருக்கிறார்கள்.

கலந்து கொள்ளவில்லை
பண்ருட்டி ராமச்சந்திரன், புத்திசந்திரன், ஜஸ்டிஸ் செல்வராஜ் ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வரவில்லை என கடிதம் கொடுத்துள்ளனர். திண்டுக்கல் சீனிவாசன் தான் மருத்துவமனையில் இருப்பதால் கூட்டத்திற்கு வர முடியவில்லை எனக் கடிதம் அளித்துள்ளார். இப்படியாக 5 பேர் மட்டுமே இந்த தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை." எனத் தெரிவித்தார்.

என்ன ஆலோசனை?
மேலும், வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பொருளாளர் பதவியில் ஓ பன்னீர்செல்வம் நிலைப்பாரா? இல்லையா? என்பது வரக்கூடிய பொதுக்குழு கூட்டத்தில் தெரியவரும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications