Vijay: அன்னிக்கும் கருப்பு சிவப்பு.. இன்னிக்கும் கருப்பு சிவப்பு.. என்ன சொல்ல வருகிறார் விஜய்?
சென்னை: 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து வாக்களித்துவிட்டு சென்ற நடிகர் விஜய் இன்றைய தினம் கருப்பு நிற மாஸ்கில் சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்துள்ளார். இதன் மூலம் விஜய் என்ன சொல்ல வருகிறார்?
Recommended Video
தமிழகத்தில் அரசியலுக்கு வரும் கனவுடன் இருக்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
அவர் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு சைக்கிளில் வந்து வாக்களித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது வீட்டிலிருந்து நீலாங்கரைக்கு சைக்கிளில் விஜய் வந்திருக்கலாம் என கூறப்பட்டது.

சைக்கிளில் வந்த விஜய்
இதையடுத்து அருகில் உள்ள வாக்குச் சாவடிதானே என்பதால்தான் அவர் சைக்கிளில் வந்ததாக விஜய் தரப்பு விளக்கமளித்தது. சரி இந்த சம்பவத்தில் இன்னொன்றை எல்லாரும் கவனித்தார்கள். விஜய் கருப்பு- சிகப்பு நிற சைக்கிளில் வந்திருந்தார். இதனால் விஜய் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.

நகர்ப்புற தேர்தல்
இந்த நிலையில் இன்றைய தினம் நடந்த நகர்ப்புற தேர்தலிலும் நீலாங்கரை வாக்குச் சாவடிக்கு 7 மணிக்கெல்லாம் வருகை தந்த விஜய் தனது சிகப்பு நிற காரில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்திருந்தார். இதுவும் இப்போது பெரிதும் பேசப்படுகிறது. அப்போதும் கருப்பு சிகப்பு, இப்போது கருப்பு சிகப்பு...

குருவி படம்
உதயநிதி சினிமாவுக்கும் அரசியலுக்கும் வராத நேரத்தில் ரெட் ஜெய்ன்ட் பேனரில் விஜய்யை வைத்து குருவி படம் எடுக்கப்பட்டது. அன்று முதல் இருவரும் நெருக்கமாகினர். அப்போதும் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பார் என பேசப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து விஜய், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படங்களில் நடித்து வந்ததால் இது அந்த பேச்சுக்கு மேலும் எரியூட்டியது. எனினும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது தலைவா (Time to lead)படத்திற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு அந்த படம் வெளியானது. இதற்காக ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு எஸ்டேட் வரை விஜய் சென்றதாகவும் கூறப்பட்டது. இது போன்ற பிரச்சினைகளால் திமுகவுடன் நெருக்கம் காட்டுவதை விஜய் குறைத்து வந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மெர்சல் பட பிரச்சினை வந்தது.

மெர்சல் திரைப்படம்
அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு மெர்சல் திரைப்படம் வந்த போது அதில் விஜய் ஜிஎஸ்டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் பேசியிருந்தார். இது ரசிகர்கள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் பாஜக மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த படத்தில் வரும் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்திவந்தது.

மெர்சல் திரைப்படத்திற்கு திமுக ஆதரவு
இந்த நிலையில்தான் மெர்சல் திரைப்படத்திற்கு அப்போது திமுக செயல்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தனது ட்வீட்டில் பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக என்றும் துணை நிற்கும் எனவும் ஜனநாயகத்திற்கு விரோதமாக பாஜக செயல்படுகிறது என்றும் காட்டமாக கூறியிருந்தார் ஸ்டாலின்.

இசை வெளியீட்டு விழாக்கள்
தொடர்ந்து நடிகர் விஜய் தனது இசை வெளியீட்டு விழாவில் எல்லாம் அரசியல் பேசி வந்தார். இந்த நிலையில்தான் விஜய் நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த போது அவரது வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நெய்வேலியில் ஷூட்டிங் நடத்த அனுமதிக்கக் கூடாது என பாஜக போராட்டம் நடத்தி வந்தது. இதையடுத்து விஜய்க்கு ஆதரவாக ரசிகர்கள் நெய்வேலிக்கு திரண்டு வந்தனர்.

விஜய் செல்பி
அங்கு வரும் ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்தார். விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை கண்டு அரசியல் கட்சிகள் ஆச்சரியப்படும் அளவுக்கு கூட்டம் இருந்தது. விஜய் படத்தின் வசனங்களை நீக்க வேண்டும், வருமான வரித் துறை ரெய்டு, விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை பாஜக மூத்த தலைவர் எச் ராஜா வெளியிட்ட விவகாரங்கள் உள்ளிட்டவைகளில் திமுக விஜய்க்கு ஆதரவாக இருந்தது.

ஸ்டாலின்- விஜய் சந்திப்பு
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்டாலின் சகோதரி வீட்டு திருமணத்தில் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் ஸ்டாலினுடன் சந்தித்து பேசினார். தொடர்ந்து விஜய்க்கு திமுக ஆதரவு குரல் கொடுத்து வருவதால் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் கட்சி தொடங்குவது குறித்தும், திமுகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்திருக்கலாம் என பேசப்பட்டது.

உதயநிதி- விஜய் சந்திப்பு
அப்போது ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்ததால் அவருக்கு போட்டியாக விஜய்யை முன்னிறுத்த திமுக முயற்சித்ததாகவும் பேசப்பட்டது. அது போல் ஒரு திரைப்பட விவகாரம் குறித்து பேசுவதற்காக 13 ஆண்டுகள் கழித்து இளைய தளபதி விஜய்யும், "குட்டி தளபதி" உதயநிதியும் சந்தித்துக் கொண்டதும் கூட, இருவரும் சேர்ந்து அரசியலில் களமிறங்கலாம் என பேசப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்
ஆனால் அது போல் எதுவும் நடக்கவில்லை, கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சிகளை காட்டிலும் விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகளால் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்பட்டது. அதாவது விஜய் வராமலேயே இப்படி என்றால் விஜய் அரசியலுக்கு வந்தால் எப்படி என பேசப்பட்டது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
எனவே வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் விஜய் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அச்சாரமாக அன்று கருப்பு சிவப்பில் வந்த நடிகர் விஜய் இன்றைய தினமும் கருப்பு சிவப்பு "அடையாளத்துடன்" வந்தாரா என கேள்வி எழுகிறது. ஆனால் அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுவது , விஜய் ஏற்கெனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது இயக்கத்தை இறக்கிவிட்டு ஆழம் பார்த்துவிட்டார். எனவே அவர் 2024 ஆம் ஆண்டு தனித்து போட்டியிட்டு தனது கட்சிக்கான செல்வாக்கை தெரிந்து கொள்ள முயற்சிப்பார் என சொல்கிறார்கள். இன்னும் சிலர் கருப்பு சிவப்பு போட்டு வந்தது ஒரு குற்றமா, அதற்காக விஜய் திமுகவுக்கு ஆதரவு என சொல்லிவிட முடியுமா என கேட்கிறார்கள்.

புதுவை ரங்கசாமியுடன் சந்திப்பு
ஜெயலலிதா, கருணாநிதி இறப்புக்கு பிறகு விஜய் திமுகவுடன் இணக்கமாக இருந்து வரும் நிலையில் ஒரு வேளை அவர் திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அது ரசிகர்களை பாதிக்காதவாறு இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய் வீட்டிற்கு வந்து புதுவை முதல்வர் ரங்கசாமி சந்தித்துவிட்டது சென்றதால் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும் என கணிப்பதில் சற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் நாள் இருப்பதால் விஜய்யின் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நடிகர் விஜய் சொன்னது போல் அவர் போக வேண்டிய இடத்திற்கான ரயில் வந்துவிட்டதா, அதில் ஏறி அவர் பயணிப்பாரா என்பதையும் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications