"பெட்ரோல், டீசல்" காரை தவிர்த்து.. சைக்கிளில் அசத்தலாக வந்து ஓட்டு போட்ட விஜய்! செம காரணம் இருக்கு
சென்னை: எதிலுமே வித்தியாசமாக செயல்படக் கூடியவர் நடிகர் விஜய் . இன்றும் அப்படித்தான் அவர் வாக்கு பதிவு செய்வதற்கு வந்தார் என்பதால் வியந்து பார்க்கிறது ரசிகர் பட்டாளம்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பல்வேறு பிரபலங்களும் ஓட்டு போட்டபடி இருக்கிறார்கள்.
7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் ஆளாக நடிகர் அஜீத், மனைவி ஷாலினி ஓட்டு போட்டதை பார்க்க முடிந்தது. இதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தாங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர்.

விலை மதிப்புள்ள கார்
நடிகர்கள் சூர்யா அவரது தம்பி கார்த்தி உள்ளிட்டோரும் காலையிலேயே ஓட்டு போட்டனர். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் நடிகர் நடிகைகள் அனைவருமே தங்களது கார்களில் ஓட்டுபோட வந்தனர். அதிலும் முன்னணி நடிகர் நடிகைகள் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள காரில் வந்து ஓட்டுப் போட்டுவிட்டு சென்றனர்.

பச்சை நிற டீ சட்டை
இதில்தான் விஜய் வித்தியாசப்பட்டார். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு அவர் சைக்கிளை ஒட்டியபடி வந்து அங்கு தனது வாக்கை பதிவு செய்து அசத்தினார். பச்சைநிற டீ சட்டை அணிந்தபடி அவர் சைக்கிள் ஓட்டி வந்ததை ரசிகர்கள் இரு புறமும் சூழ்ந்து நின்று ஆரவாரத்துடன் கோஷம் போட்டு வரவேற்றனர்.

ஒரு விரல் புரட்சி
ஓட்டு போட்ட பிறகு ஒற்றை விரலை தூக்கி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். ஒருவிரல் புரட்சி என்ற அவரது திரைப்பட பாடல் ரசிகர்களுக்கு அப்போது நினைவுக்கு வந்தது. இது ஒரு பக்கம் என்றால் விஜய் எதற்காக விலை உயர்ந்த காரை தவிர்த்துவிட்டு சைக்கிளில் ஓட்டுச்சாவடிக்கு வருகை தந்தார் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

சமூக நலன்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீடுகளுக்கு இரவோடிரவாக விஜய் நேரில் சென்று ஆறுதல் சொன்னார். தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இவ்வாறு தொடர்ந்து சமூக அக்கறை உள்ளவராக இருந்து வருகிறார் விஜய்.

வெப்பமயமாதல்
தற்போது உலகம் முழுக்க வெப்பமயமாதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசலை தவிர்த்துவிட்டு சைக்கிள் ஓட்டுவது நல்லது என்ற மெசேஜ் விஜய்யால் கொடுக்கப்பட்டுள்ளது. எனவேதான் சைக்கிள் ஓட்டியபடி வந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் விஜய். பெட்ரோல் டீசல் போன்றவற்றை தவிர்ப்பது நாட்டுக்கும் உலகத்துக்கும் நல்லது என்று விஜய் சொல்லவருகிறார். அதை உணர்த்தும் வகையில்தான் பச்சை நிறத்தில் டீ சட்டை அணிந்து உள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

பெட்ரோல், டீசல் விலை
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. மவுனமாக விஜய் ஒரு செய்தியை கடத்தியுள்ளார் என்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதை உணர்த்தும் வகையில் அல்லது விலை உயர்வுக்கு எதிர்ப்பாக, விஜய் இவ்வாறு சைக்கிளில் வந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால் கடந்த முறையும் விஜய் சைக்கிளில்தான் ஓட்டு போட வந்தார். எனவே அவர் மாசு குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்ததான் இப்படி வந்தார் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications