சேகர்பாபு "பவர்" இதுதான்.. நான் வந்ததே ஸ்டாலினுக்காகத்தான்.. புரசையில் புகழ்ந்த நடிகை ரோஜா
முதல்வர் ஸ்டாலினை மீண்டும் பாராட்டினார் நடிகை ரோஜா
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினை, ஆந்திர நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா, மீண்டும் ஒருமுறை பாராட்டி உள்ளார்.
ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என்ற பெயரை பெற்றவர் நடிகை ரோஜா.. ஆந்திராவின் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா, பல அதிரடிகளையும் செய்து வருபவர்..
இந்த அதிரடிகளுக்கு தனக்கு பெரிதும் காரணமாக இருப்பது மறைந்த ஜெயலலிதா தான் என்றும், அவரது பாணியையே தான் கையில் எடுத்து வருவதாகவும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் சொல்லி வருபவர்.

ஆந்திரா
இதில் கைத்தறி நெசவாளர்களுக்கு ரோஜா ஆரம்ப காலம் முதலே ஆதரவாக இருப்பவர்.. ஒருமுறை ஆந்திராவில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் விவசாயிகள், விசைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகை ரோஜா தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தது, அப்போதைய அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.. இப்போதுகூட நெசவாளர்களின் ஆதரவு ரோஜாவுக்கு ஏராளமாக அங்கிருக்கிறது..

வாழ்வாதாரம்
அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பல ஏற்பாடுகளையும் விடாமல் ரோஜா செய்து கொண்டிருக்கறார்.. அதே முயற்சியை தமிழகத்திலும் ஏற்படுத்த விரும்பியுள்ளார்.. அதற்காக கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்.. தமிழக நெசவாளர்களின் வாழ்வாதாரத்திற்காக தான் ஆரம்பிக்க போகும் திட்டங்கள் குறித்து முதல்வரிடம் ரோஜா எடுத்துரைத்தார்.

ஜெகன் அண்ணா
"அங்கே எங்களுடைய முதல்வர், என்னுடைய அண்ணா, ஜெகன் மோகன் ரெட்டி, நெசவாளர்களுக்கு நிறைய சப்போர்ட் பண்றார்.. அதே மாதிரி ஸ்டாலின் சார்கூட சப்போர்ட் பண்ணுவார்னு ரொம்ப நம்பறேன்.." என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.. அத்துடன் முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறிக்கப்பட்டு நெசவாளர்கள் உற்பத்தி செய்த பட்டு சால்வையை முதல்வருக்கு பரிசாகவும் அளித்து விட்டு சென்றார் ரோஜா..!

கோரிக்கை
இதனிடையே, ஆந்திர தமிழக எல்லையோர பகுதிகளிலிருக்கும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்தார்... நம் முதல்வரும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கினார். இதற்கு அவரும் நன்றி தெரிவித்து பேசி இருந்தார்... இப்படி ரோஜா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைக்கும் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததால், மின்னலை விட வேகமானவர் என்றும் புகழ்ந்துள்ளார் ரோஜா.

பிறந்த நாள் விழா
சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் எழும்பூர் தி.மு.க இளைஞர் அணி சார்பில் சென்னை புரசைவாக்கம் தானே தெருவில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி புகழ் அரங்கம் நிகழ்வு நடைபெற்றது.. இதில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, இயக்குனர் சுசி கணேசன், நகைச்சுவை நடிகர்கள் பாஸ்கர், மயில்சாமி, திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே செல்வமணி, நடிகை ரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாமியார் வீடு
அப்போது பேசிய ரோஜா, "எனக்கு தாய்வீடு ஆந்திரா என்றால், தமிழ்நாடு மாமியார் வீடு... இங்குள்ள மக்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கு நான் வந்தது 2 நபர்களுக்காகத்தான்... ஒன்று முதல்வர் ஸ்டாலின், மற்றொன்று அமைச்சர் சேகர்பாபு... முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அண்ணன் தம்பி உறவாக மேடையை முதல்வர் ஸ்டாலின் அலங்கரித்தார். இப்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் என்ன தேவை என்பது அறிந்து மின்னல் போல் செயல்படுகிறார்.

சேகர்பாபு
பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்யும் நல்ல திட்டங்களால், நிச்சயம் இன்னும் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மட்டுமே திகழ்வார்... அறநிலையத்துறைக்கு அமைச்சராக சேகர்பாபு பதவியேற்ற பிறகுதான் அந்த துறையின் பவர் என்ன என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது... அந்த அளவிற்கு சிறப்பாக அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டு வருகிறார். அரசுக்கு நிதி கொடுக்கும் துறையாக அறநிலையத்துறையையும் செயல்படுத்தி வருகிறார்" என்றார் ரோஜா.












Click it and Unblock the Notifications