தொடர்பு எல்லைக்கு வெளியே.. ராஜேந்திர பாலாஜி போனை எடுக்காத ஓபிஎஸ் - இபிஎஸ்? இப்படி ஒரு காரணமா?
சென்னை: ஜாமீனில் வெளியே வந்து இருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கட்சி தலைமை இதுவரை தொடர்புகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.சிறையில் இருந்து வெளியான ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக சார்பாக பெரிதாக வரவேற்பு எதுவும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி தற்போது பெயிலில் வெளியே வந்து இருக்கிறார். ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் உள்ளது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தலைமறைவாகி இருந்த இவர் கைதாகி அதன்பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன் 4 வார ஜாமீன் பெற்று தற்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்ததும் நேரடியாக வீட்டிற்கு செல்லாமல் திருச்சியில் இருக்கும் கண்ணப்பா ஹோட்டலில் சில மணி நேரம் தங்கி இருந்தது தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். அங்கு சில விஐபி அதிமுக நிர்வாகிகளை அவர் சந்தித்தது பற்றியும் குறிப்பிட்டு இருந்தோம். அங்கிருந்து நேராக விருதுநகர் சென்று தனது வீட்டில் ராஜேந்திர பாலாஜி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். ராஜேந்திர பாலாஜி திருச்சியில் விடுதலையான போது அவரை வரவேற்க பெரிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

அதிமுக ஆதரவு
அதிமுகவின் டாப் லீடர்கள் யாரும் ராஜேந்திர பாலாஜியை அழைக்க வரவில்லை. திருச்சி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே ராஜேந்திர பாலாஜியை அழைக்க வந்தனர். இதுவே அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சி அளித்ததாக கூறப்பட்டது. கட்சியின் டாப் லீடர் யாராவது வந்திருந்தால்.. ராஜேந்திர பாலாஜிக்கு தெம்பாக இருந்திருக்கும். ஆனால் அப்படி யாரும் வரவில்லை.. இதனால் கட்சி எங்கே தன்னை ஓரம்கட்டிவிடுமோ என்ற அச்சம் ராஜேந்திர பாலாஜிக்கு இருக்கிறது என்று அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி விடுதலை
இது ஒரு புறம் இருக்க வீட்டிற்கு சென்ற ராஜேந்திர பாலாஜியை அதிமுக தலைமை இப்போது வரை தொடர்பு கொள்ளவில்லையாம். முன்னாள் அமைச்சர் ஒருவர் ஜெயிலில் இருந்து வந்து இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் கட்சி தலைமை அவரை தொடர்பு கொண்டு பேசுவதே வழக்கமாக நடக்கும். அதுதான் அவருக்கு ஆறுதலாக இருக்கும். கட்சியில் இருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும்.. கட்சி நம்மை கைவிடாது என்ற நம்பிக்கையை கொடுக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருமே ராஜேந்திர பாலாஜிக்கு போன் செய்யவில்லையாம்.

ஓ பன்னீர்செல்வம் ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி விடுதலையான அன்று நாள் முழுக்க அவரிடம் இரண்டு பேருமே போனில் பேசவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்று மாலைவரை பொறுத்திருந்து பார்த்துவிட்டு பின்னர் ராஜேந்திர பாலாஜியே இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் போன் செய்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் போனை எடுக்காமல் அவர்களின் பிஏ மட்டுமே போனை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. உங்களுக்கு தலைமை சீக்கிரம் போன் செய்யும்.. இப்போது போனில் பேசினால் சரியாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வமின் உதவியாளர்கள் ராஜேந்திர பாலாஜியிடம் பேசியதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி ராஜேந்திர பாலாஜி
இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது இரண்டு விஷயங்களை ரரக்கள் நம்மிடம் தெரிவித்தனர். அதன்படி ராஜேந்திர பாலாஜி போலீசில் சரண் அடையாமல் வெளியே சுற்றியதை எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் விரும்பவில்லை. இதனால் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். கட்சிக்கு தேவையில்லாத விமர்சனம் வந்துவிட்டதாக அவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் ராஜேந்திர பாலாஜியை கொஞ்சம் தவிர்த்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
Recommended Video

என்ன காரணம்?
இன்னொரு காரணம் பற்றி விசாரிக்கையில், ராஜேந்திர பாலாஜியின் போன் கால்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு யாராவது உதவுகிறார்களா என்று உளவுத்துறை சோதனை செய்து வருகிறது, அப்படி இருக்கும் போது போனில் "சில விஷயங்களை" பேசுவது சரியாக இருக்காது. அதனால் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இதுவரை ராஜேந்திர பாலாஜியுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தரப்பு போனில் பேசவில்லை என்று அதிமுக தரப்பு நம்மிடம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications