எடப்பாடி கூட்டணிக்கு அடுத்தடுத்து நோ சொன்ன.. நாம் தமிழர், விசிக, தவெக விஜய்.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பிற்கு நாம் தமிழர், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக வெற்றிக் கழக கட்சிகள் அடுத்தடுத்து மறுப்பு தெரிவித்துள்ளன. எடப்பாடி அழைப்பை 4 கட்சிகளும் நிராகரித்து உள்ளன.
சமீபத்தில் சிதம்பரம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம். கட்சிகள் நிராகரித்தன. திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
திருமா நிராகரிப்பு
இதற்கு விசிக திருமாவளவன் அளித்த பதிலில், அதிமுக - பாஜகவின் பழைய கூட்டணியில் இருந்த கட்சிகளே மீண்டும் அவர்களுடன் சேரவிலையே. பாமக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. தேமுதிக மீண்டும் கூட்டணியில் இணையவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் புதிய புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பின் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றெல்லாம் சொன்னீர்களே.. இப்போது என்ன ஆகிவிட்டது? ஏன் கூட்டணியில் வேறு கட்சிகள் இணைய முடியாமல் போய்விட்டது? ஏன் உங்கள் கூட்டணியில் இருந்த பழைய கட்சிகளே உங்களுடன் சேர மறுத்து வருகிறார்கள். திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளை இப்போது அழைக்கிறீர்கள்.
இது நீங்கள் சொன்ன கருத்தா ? அப்படி தெரியவில்லை. இதை எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு யாரோ சொல்லிக்கொடுக்கிறார்கள். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று யாரோ சொல்லிக்கொடுத்த கருத்து போல இருக்கிறது என்று, விசிக தலைவர் எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் பதிலடி
எடப்பாடி பேச்சுக்கு, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலையில் ஒரு பேச்சு அதற்கு நேர் மாறாக மாலையில் ஒரு பேச்சு. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பேச்சு அதற்கு நேர்மாறாக இப்போது பிஜேபியோடு கூட்டணி. போன வாரம் கம்யூனிஸ்ட்களையே காணோம் என்றார், இந்த வாரம் அழைக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கு அவர் விரிப்பது ரத்தின கம்பளம் அல்ல. வஞ்சக வலை என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்.ஆர்எஸ்எஸ் எனும் புதை குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பது அதிமுக தான் என்று பதிலளித்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சிபிஎம் நிராகரித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர் மறுப்பு
எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பு தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று திமுக கூறி வருகிறது. திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்று மற்ற கட்சிகள் கூறுகின்றன. தீமைக்கு மாற்று இன்னொரு தீமை அல்ல.அதிமுக உடனான கூட்டணி என்பது தீமைக்கு மாற்றுத் தீமை கிடையாது. நெருப்பை வைத்து நெருப்பை அணைக்க முடியாது. நாங்கள் நீராக இருப்போம். திமுகவுக்கு எதிராக இணையும் ஓரணி நாங்கள் அல்ல. திமுகவை எதிர்க்கும் ஒரே நாம் தமிழர் தான் என்று தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலம் முதலே எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகமும் மறுப்பு
எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், "எடப்பாடி பழனிசாமி குழப்பமான மனநிலையில் உள்ளார். தங்களின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தன்னை ஒரு பெரிய தலைவர் என்று காட்டிக் கொள்ளும் வகையில் தவறான கருத்தை கூறி வருகிறார். அவர்களின் கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாது. எங்களை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது செயற்குழு கூட்டத்திலேயே விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும், அவரது தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
மேற்கண்ட கட்சிகள் எல்லாமே பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் கட்சி. விசிக, சிபிஎம் கடுமையாக பாஜகவை எதிர்க்கும் கொள்கை கொண்ட கட்சிகள். நாம் தமிழரும் கொள்கை ரீதியாக தேசிய கட்சிகளை எதிர்க்கும் கட்சி. தமிழக வெற்றிக் கழகம்.. கொள்கை எதிரி என்று பாஜகவை கூறி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் எடப்பாடி பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுக கூட்டணிக்கு மற்ற கட்சியினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications