'ரெட் ஜெயிண்ட் ' என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? திருமாவளவனுக்கு பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி!
சென்னை: இரும்பன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளும் வந்துவிட்டால் நிலை என்னாவது? என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருந்தார். இதுகுறித்து பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, 'ரெட் ஜெயிண்ட் ' என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? சரக்கில்லையா? முறுக்கிக்கில்லையா? மிடுக்கில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்பன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், 'தமிழகத்தில் திரை துறையின் மூலம் அரசியலிலும் மாற்றம் ஏற்படுத்த முடியும். எந்த உலகத்திலும் இப்படி இல்லை. திரைத்துறையில் முதல்வர்களை தேடுவதும் இங்கு உண்டு. அந்த வகையில் அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா முதல்வர்களாகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

எம்ஜிஆர் பேசிய அரசியல்
தமிழக அரசியலில் 50 ஆண்டுகள் திரைத்துறையின் பங்கு இருக்கிறது. திரைத்துறையில் பலமானவர்களாக நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். சினிமாவுக்கு திராவிட அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு உண்டு. எம்ஜிஆரின் அழகுக்காக ஆட்சியைப் பிடிக்கவில்லை. அரசியல் பேசினார். சமூக நீதி அரசியல், தொழிலாளிகளின் அரசியலை பேசினார்.

உழைப்பு சுரண்டல்
சினிமாவை வருமானத்துக்கு மட்டுமல்லாமல் கொள்கைகளுக்காகவும் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைக்கு திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி வருகிறது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும் ? தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்களின் உரிமைகள் பறிபோய் இருக்கிறது. இது தொழில் போட்டி மட்டுமல்ல, தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுகிற மோசமான அணுகுமுறை. அரசியலை போல சினிமாவிலும் தனிநபரை சார்ந்திருக்கக்கூடிய நிலை வளர்ந்துவருகிறது.

யாருக்கும் எதிராக பேசவில்லை
யாரையும் மனதில் வைத்துக்கொண்டோ, எதிராகவோ பேசவில்லை. சமூக பொறுப்புணர்வு என்ற அடிப்படையில் தான் இதனை பேசுகிறேன். இது தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் மிக மோசமான அணுகுமுறை என்று பேசி இருந்தார். இதனை பாஜக ஆதரவாளர்கள் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தை மனதில் வைத்து திருமாவளவன் பேசுவதாக விமர்சித்து வருகின்றனர்.

நாராயணன் திருப்பதி ட்வீட்
இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளும் வந்துவிட்டால் நிலை என்னாவது? என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருக்கிறார். 'ரெட் ஜெயண்ட் 'என்று குறிப்பிட்டு சொல்ல பயம் ஏன்? சரக்கில்லையா? முறுக்கிக்கில்லையா? மிடுக்கில்லையா? என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் அக்கட்சி ஆதரவாளர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications