மிக்ஜாம் புயலில் சிக்கிய நடிகர் ஆமிர் கான்.. மும்பையிலிருந்து சென்னைக்கு ஏன் வந்தார் தெரியுமா?
சென்னை: மிக்ஜாம் புயலில் சிக்கி மீட்கப்பட்ட பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சென்னைக்கு ஏன் வந்தார் என்பது தெரியுமா?
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வடதமிழகமான சென்னை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆந்திரா கடற்கரையை நோக்கி சென்றது. இது சென்னையை ஒரு புரட்டி புரட்டியது. இந்த புயலால் பெய்த மழையால் சென்னையே தற்போது தத்தளித்து வருகிறது.

குறிப்பாக மடிப்பாக்கம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், போரூர், மேடவாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துக் கொண்டது. கழுத்தளவு நீர் இருப்பதால் மக்கள் அங்கிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
படகுகள் வரவழைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். ஆனாலும் சில இடங்களில் படகு போக்குவரத்து வரவில்லை என மக்கள் குமுறுகிறார்கள். கரென்ட் இல்லை, தண்ணீர் இல்லை, பால் இல்லை, பிஸ்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே இல்லை. உணவு பாக்கெட்டுகள் கூட ஒரு சிலருக்கு மட்டுமே கிடைப்பதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் சென்னை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் தொற்றுநோய்கள் வரும் அபாயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது போல் காரப்பாக்கத்திலும் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டுள்ளது. இந்த வெள்ளநீரில் இருந்து படகு மூலம் நடிகர் விஷ்ணு விஷால் தனது குடும்பத்தினருடன் மீட்கப்பட்டார். அப்போது அந்த படகில் ஆமிர் கானும் இருந்தார். ஆனால் அவர் ஏன் சென்னைக்கு வர போகிறார் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் அவர்தான். தனது தாய் ஜுனத் ஹுசைனின் சிகிச்சைக்காக அவர் சென்னையில் ஒரு மாதமாக தங்கியிருக்கிறாராம். அவர் காரப்பாக்கத்தில் ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கிறார். சிதாரே ஜமீன் பர் (Sitare Zameen Par) என்ற புதிய திரைப்படத்தை அடுத்ததாக துவங்க உள்ள அமீர்கான், ஜனவரி மாதத்திற்கு பிறகு இந்த பணிகளை மேற்கொள்ள மும்பை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் அதுவரை சென்னையில் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவர் வெள்ளநீரில் சிக்கியுள்ளார். விஷ்ணு விஷால், ஆமிர் கான் ஆகியோர் வெள்ளநீரில் தத்தளித்துள்ளதை அறிந்த அஜித் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். விஷ்ணுவிஷால் தனது எக்ஸ் பக்கத்தில் சில படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கரென்ட் இல்லை, வீட்டை சுற்றி வெள்ளம், போன் சிக்னல் கிடைக்கவில்லை, மாடிக்கு சென்ற போதுதான் சிக்னல் கிடைத்தது. உதவிக்காக குரல் கொடுத்தேன். தற்போது பத்திரமாக மீட்கப்பட்டேன் என்றார்.
வெள்ளத்தில் ஆமிர்கான் சிக்கிய நிலையிலும் தனது செல்வாக்கையோ பிரபலத்தையோ பயன்படுத்தாமல் படகு வரும் வரை சாமானியர்களை போல் காத்திருந்தார் . இதற்காக அவரை பலர் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications