ஓபிஎஸ் - இபிஎஸ் வேணாம்.. அதிமுகவில் 2 அணின்னு பார்த்தா.. திடீர்னு வந்த 3வது அணி! யாரு இந்த "குட்டி"?
சென்னை: என்னப்பா இது விக்ரம் படம் இண்டர்வெல் ட்விஸ்டை விட இது பயங்கர ட்விஸ்டா இருக்கே என்று எண்ண தோன்றும் அளவிற்கு.. அதிமுகவில் பெரிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் அல்லது இபிஎஸ்ஸில் யாருக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஸும் வேண்டாம்.. இபிஎஸ்ஸும் வேண்டாம் என்று மூன்றாவதாக கருத்து ஒன்று வெளியாகி உள்ளது.
அதிமுகவில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் பொதுச்செயலாளர் பதவி குறித்து ஆலோசனை செய்துள்ளனர். கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
ஒற்றை தலைமை இருந்தால் கட்சியை காக்க முடியும்.. எடப்பாடி பழனிச்சாமிதான் ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர்.

ஓ பன்னீர்செல்வம்
இதை கேட்டு கொதித்து போன ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோபமாக மீட்டிங் முடிந்து விரக்தியுடன் சென்றுள்ளார். இதையடுத்து தற்போது ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. எடப்பாடியை பொதுச்செயலாளர் ஆக்க ஒப்புக்கொள்ளுங்கள் என்று கூறி, ஓபிஎஸ்ஸிடம் நிர்வாகிகள் பலர் சமாதானம் செய்ய முயன்று வருகிறார்கள். ஆனால் ஒற்றை தலைமைக்கு சான்ஸே இல்லை என்று ஓபிஎஸ் விடாப்பிடியாக கூறிவிட்டார்.

எடப்பாடி
இந்த நிலையில், அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் வேண்டாம். மூன்றாவது அணி உருவாக்கலாம் என்பது போல முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி பேசி உள்ளார். கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக இப்பொழுது ஜாதி கட்சிக்காக மாறி வருகிறது. ஜெயலலிதா இருந்தால் இப்படி ஆயிருக்குமா. ஒபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே ஒதுங்கி கொள்ள வேண்டும்.. மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நீதான் முதல்வர் என்று கைகாட்டி பதவி கொடுத்தவர் சசிகலா. அவரைக் கேவலமாக பேசலாமா.

என்ன சொன்னார்?
இவர்கள் நன்றி மறந்தவர்கள். இவர்கள் இருவரும் கட்சியில் இருக்க கூடாது. எதோ..ஒபிஎஸ் - ஈபிஎஸ் இரண்டு பேருமே ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்துவிட்டார்கள். இப்போது இரண்டு பேரும் சண்டை போட்டு கொள்கின்றனர். இப்படி சண்டைபோட்டு தான், ஒபிஎஸ் - ஈபிஎஸ் மற்றும் வேலுமணி இருக்கும் வார்டுகளிலே , திமுக கைப்பற்றியது. இவர்கள் சண்டை போடுகிறார்கள். இதன் மூலம் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள், என்று கூறினார்.

ஆறுகுட்டி யார்?
வி. சி. ஆறுகுட்டி அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா அப்போது வாய்ப்பு கொடுத்த கொங்கு மண்டல நிர்வாகிகளில் இவரும் ஒருவர். மீண்டும் 2016ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். தொடக்கத்தில் இருந்தே இவர் தீவிர சசிகலா ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சசிகலா
அதிமுகவில் இருந்தாலும் இவர் சசிகலாவை ஆதரித்து அவ்வப்போது பேசி இருக்கிறார். கடந்த மார்ச் மாதம் சசிகலா பற்றி பேசிய அவர், அதிமுகவில் கடந்த நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி தேர்தலை நடத்ததாது தான். ஆனால் ஆட்சிக்கு வந்த திமுக சில நாட்களிலே தேர்தலை நடத்தி அதிகம் வெற்றி பெற்றுவிட்டனர். அதிமுக தலைமையை சசிகலா ஏற்கவேண்டும். டிடிவி தினகரன் வழிநடத்த வேண்டும். இதுதான் ஒரே தீர்வு.

செட்டாகவில்லை
அதிமுகவில் இரட்டை தலைமை சரி இல்லை. தலைமை சரியாக இருந்தால் நாம் வென்று இருக்கலாம். சசிகலாவும், டிடிவி தினகரனும் இணைந்து கட்சியை வழிநடத்தினால் அதிமுகவை காப்பாற்ற முடியும். அப்போதுதான் நாம் தொய்வில்லாமல் வளர முடியும். தேனியில் சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் போட்டார்கள். அதேபோல் எல்லா மாவட்டங்களிலும் போட வேண்டும். கட்சி நலன் கருதி இப்படி பேசுகிறேன் என்று அப்போதே சசிகலாவிற்கு ஆதரவாக பேசினார். கடந்த தேர்தலில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஆறுகுட்டி எடப்பாடி மீது அப்செட்டில் இருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications