பாஜக அலுவலக ஊழியர் வீட்டிற்கு போன வேகத்தில் திரும்பிய ED.. அழுத்தம் கொடுத்தது யார்? ஜோதிமணி தடதட!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று போன வேகத்திலேயே திரும்பி வந்தது பற்றி சந்தேகங்களை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி.
தமிழ்நாட்டில் சுமார் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தியாகராய நகர், சரவணா தெரு, திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்றது. ரியல் எஸ்டேட் தொழிலபதிபர்களுக்கு சொந்தமான இடங்கள், அவர்களுக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.

தென்சென்னை பாஜக மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஜோதிக்குமார் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. ஆனால், இந்தச் சோதனைகள் விரைவாகவே முடிவடைந்தன. இந்நிலையில், அமலாக்கத்துறையினரை உடனே வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டுக்குச் சென்றதும், சென்ற வேகத்திலேயே திரும்பி வந்ததும் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. இந்த ரெய்டின் காரணம் என்ன? மணல் வியாபாரிகளிடம் இருந்து மாதம் 50 லட்சம் ரூபாய் அவர் பெயரில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது உண்மையா?
அதுதொடர்பாக விசாரிக்கத்தான் அமலாக்கத்துறை அவர் வீட்டுக்குச் சென்றதா? அந்தப் பணத்தைப் பெற்றதில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்புள்ளதா? இல்லையென்றால் ஏன் அமலாக்கத்துறை போன வேகத்திலேயே திரும்பி வரவேண்டும்? அமலாக்கத்துறையை பாஜக அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிக்குமார் வீட்டிலிருந்து உடனடியாக வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications