2024 லோக்சபா தேர்தலில் யாரையும் ஆதரிக்காத விஜய் கட்சி.. இதுதான் காரணம்? ஏன் அந்த முடிவை எடுத்தார்?
சென்னை:2024 எங்கள் இலக்கு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம். 2026 தேர்தலில் நிற்போம். 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம் என்று நடிகர் விஜய்க்கு நெருக்கமான அவரின் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. நடிகர் விஜய்யின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் கட்சியின் கொடி கலர் அடர் சிவப்பு + மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தில் இந்த பெயர் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கைதான் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் 2024 எங்கள் இலக்கு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம். 2026 தேர்தலில் நிற்போம். 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம். அவர் கட்சிக்கு வருவதை உறுதி செய்துவிட்டார்.
எங்களின் அரசியல் பயணம் எதை நோக்கி செல்லும் என்பதையும் சொல்வோம். அரசியல் மாற்றத்திற்கான கட்சியாக இது இருக்கும். வெறும் ஆட்சி மாற்றத்திற்கான கட்சியாக இது இருக்காது. வெறும் ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்ல மாட்டோம். எங்களுடைய கொள்கைகளை அதில் விளக்கமாக கூறி உள்ளோம். ஜாதி, மத , இன வேறுபாடு பார்க்காமல், மக்களுக்கு நல்ல ஆட்சியை கொடுக்கும் கட்சியாக இது இருக்கும் என்று அவரின் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏன் நிற்கவில்லை: நடிகர் விஜய்யின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. அதாவது 2024 லோக்சபா தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்பதற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. 2024 லோக்சபா தேர்தலுக்கு அதிக அவகாசம் இல்லை. அதோடு லோக்சபா தேர்தல் விஜய்யின் குறிக்கோள் இல்லை.
2. இந்த தேர்தலில் யாரையும் ஆதரிக்கும் எண்ணம் விஜய்க்கு இல்லை.
3. லோக்சபா தேர்தலில் திமுகவின் இந்திய கூட்டணியை ஆதரித்தால்.. விஜய் தனியாக அரசியல் தொடங்க வேண்டியதே இல்லை. அதுதான் பாஜகவை எதிர்க்க திமுக இருக்கிறதே என்ற நிலை வந்துவிடும் .
4,. அதுவே பாஜகவை ஆதரித்தால்.. ரஜினியை போல அவர் பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்கப்படுவார். அல்லது வலதுசாரி என்று முத்திரை குத்தப்படும். இதை தவிர்க்கவே நேரடியாக சட்டசபை தேர்தலில் 2026ல் நிற்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.
விஜய் அறிவிப்பு: நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
அரசியல் கட்சி அறிவிப்பு: தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அரசியல் மாற்றம் முக்கியம்: மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.
எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications