போயஸ் தோட்டத்தில் ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓ.பன்னீர் செல்வம்.. என்ன காரணம்?
சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுகவை கைப்பற்ற எத்தனை வகைகளில் போராடியும் அவரால் வெற்றி பெறவில்லை. எல்லா நீதிமன்றங்களும் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு செல்லும் என்றும் அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் சொல்லிவிட்டன.

ஓபிஎஸ் அதிமுகவில் சேர விருப்பப்பட்டாலும் அவரை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதன்படி அவருக்கு முன்பு இருக்கும் 3 வாய்ப்புகள் என்னென்ன என்றால், தனிக்கட்சியை ஓபிஎஸ் தொடங்குவது, தினகரனின் அமமுகவில் இணைந்து கொள்வது இல்லாவிட்டால் பாஜகவில் இணைந்து ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராவது போன்றவைதான். ஏற்கெனவே டிடிவி தினகரனே ஓபிஎஸ்ஸை தன் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைத்ததாகவும் அதற்கு ஓபிஎஸ் பிடிகொடுக்கவில்லை என சொல்கிறார்கள்.
இதனால் ஓபிஎஸ் தனிக்கட்சியை தொடங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதற்கான ஆலோசனைகளை மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமசந்திரன் உள்ளிட்டோர் வழங்கியதாக தெரிகிறது. பண்ருட்டியார் ஏற்கெனவே மக்கள் நல உரிமைக் கழகம் என்ற கட்சியை நடத்தியுள்ளார். இதன் அடிப்படையில் தனி கட்சி தொடங்குவதுதான் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை சிதைக்க வைக்கும் சக்தி என கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 3ஆம் தேதி அதாவது நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணத்தை தொடங்குகிறார் ஓபிஎஸ். அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் ஓபிஎஸ் நாளை புதிய கட்சியின் பெயரையும் அறிவிக்க இருக்கிறார் என்கிறார்கள்.
கட்சியின் பெயரை மட்டும் அறிவித்துவிட்டு கட்சி நிர்வாகிகளை பின்னர் அறிவிக்கும் முயற்சி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கட்சியின் பெயர் அம்மாள் மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கட்சியை தொடங்கி லோக்சபா தேர்தலையும் ஓபிஎஸ் சந்திக்க போவதாக சொல்லப்படுகிறது.
இதற்காக ஓபிஎஸ் பிரபலங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தை ஓபிஎஸ் நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications