ரயிலில் தூக்கிட்டு வாங்க! சீக்ரெட்டாக வேலையை காட்டிய சசிகலா! சிறுதாவூருக்கு போன.."அந்த" கருப்பு கார்
சென்னை: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே ஒற்றை தலைமை மோதல் எழுந்துள்ள நிலையில்தான் சசிகலா முக்கியமான கூட்டம் ஒன்றை சிறுதாவூர் பங்களாவில் நடத்தி இருக்கிறார். இந்த சந்திப்பில் சில முக்கியமான விஷயங்களை சசிகலா தரப்பு விவாதித்தாக கூறப்படுகிறது.
அதிமுக செயற்குழு கூட்டம் ஏகப்பட்ட பரபரப்பிற்கு இடையில் நேற்று முதல்நாள் நடைபெற்றது. அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வது, ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் இந்த ஒற்றை தலைமை விவகாரத்தை ஓ பன்னீர்செல்வம் கடுமையாக எதிர்த்து இருக்கிறார். இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் நேற்று நடந்த கூட்டங்களில் கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார்.

நேற்று மீட்டிங்
இந்த மீட்டிங்குகள், களேபரங்களுக்கு இடையில்தான் நேற்று சசிகலா இன்னொரு கூட்டத்தையும் ரகசியமாக நடத்தி இருக்கிறார். சிறுதாவூரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மாலைக்கு பின்பாக இந்த கூட்டத்தை சில முக்கிய நிர்வாகிகளுடன் சசிகலா நடத்தி இருக்கிறார். தான் எதிர்பார்த்த அந்த நேரம் வந்துவிட்டது.. இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சசிகலா கூட்டத்தை கூட்டி இருக்கிறாராம்.

விசாரித்தார்
பொதுவாக அதிமுக கூட்டங்கள் நடந்தால் அதை பற்றி வீடியோ சசிகலா தரப்பிற்கு செல்லுமாம். செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சசிகலாவிற்கு செல்லும். ஆனால் நேற்று முதல்நாள் நடந்த கூட்டத்தின் எந்த வீடியோவும் அவருக்கு செல்லவில்லையாம். இதனால் கூட்டத்தில் என்ன நடந்தது என்று அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டு விசாரித்து இருக்கிறார். உள்ளே போனதில் இருந்து வெளியே வந்த வரை என்ன நடந்தது என்று விசாரித்து இருக்கிறார்.

ஆதரவு அளிக்க முடிவு
இதில் ஓபிஎஸ் கேம்பை சசிகலா ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. எடப்பாடி ஒற்றை தலைமை ஆனால் மீண்டும் கட்சிக்குள் செல்லவே முடியாது. அதிமுகவை மறந்துவிட வேண்டியதுதான். அதனால் ஓபிஎஸ்ஸுக்கு இப்போது ஆதரவு தர வேண்டும். அதோடு ஓபிஎஸ்ஸுக்கும் இப்போது நம்முடைய ஆதரவை தவிர வேறு எதுவும் கிடைக்காது. எனவே அவருக்கு ஆதரவாக நாம் களமிறங்க வேண்டும். அப்போதுதான் எடப்பாடி எழுச்சியை தடுக்க முடியும் என்று சசிகலா கூறி இருக்கிறாராம்.

கருப்பு நிற கார்
இந்த கூட்டத்திற்கு கருப்பு நிற காரில் முக்கிய புள்ளி ஒருவர் சென்றுள்ளார். இப்போது அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளி அவர். கட்சியில் உயர் பதவியில் இருக்கிறார். அவர்தான் நேற்று சசிகலாவிடம், மாவட்ட செயலாளர்கள் மீட்டிங்கில் நடந்ததை எல்லாம் புட்டு புட்டு வைத்து இருக்கிறார். மீடியாக்களில் வராத விஷயங்களை எல்லாம் தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயங்களை சசிகலா கூர்ந்து கவனித்ததாக கூறப்படுகிறது.

என்ன பேசினார்?
அதோடு மாவட்ட அளவில் 23ம் தேதி வரை நிறைய தீர்மானம் போடுவார்கள். பெரும்பாலும் எடப்பாடிக்கு ஆதரவாகவே தீர்மானம் போடுவார்கள். அதன்பின் பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் போட பார்ப்பார்கள் என்று கூறி இருக்கிறாராம். இதை எல்லாம் கேட்டுக்கொண்ட சசிகலா தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவே தீர்மானம் போட வேண்டும். ஏதாவது பண்ணுங்க என்று கூறி இருக்கிறாராம். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஆட்களை இறக்கவும் அவர் முடிவு செய்து இருக்கிறாராம்.

ரயிலில் தூக்கிட்டு வாங்க
தென் மாவட்டங்கள் , டெல்டா மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு முக்குலத்தோடு நிர்வாகிகளை கொண்டு வர சசிகலா ஆலோசனை வழங்கி இருக்கிறாராம். ரயிலில் இவர்களை கூட்டிட்டு வாங்க.. சென்னையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஆள் பலத்தை காட்டுங்க. மாநிலம் முழுக்க போஸ்டர் ஒட்டுங்க என்று சசிகலா அந்த புள்ளியிடம் ஆலோசனை வழங்கி இருக்கிறாராம். சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில்தான் சசிகலா இந்த ஐடியாக்களை வழங்கி இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications