கோவையில் நிர்மலா சீதாராமன் நிகழ்வில் கோஷமிட்ட சதீஷுக்கு வங்கி கடன் கிடைக்காதது ஏன்? பாஜக விளக்கம்
சென்னை: கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிகழ்ச்சியில் கடன் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி கோஷமிட்ட சதீஷ் என்பவருக்கு ஏன் கடன் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
சதீஷின் மனைவி ஏற்கனவே வங்கி கிரிடிட் கார்டு கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தால் புதிதாக 40 லட்சம் கடனை பெற முடியவில்லை என்று பாங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது என்றும் எஸ்ஜி சூர்யா தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் தொழில்முனைவோர், விவசாயிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், மாணவ-மாணவிகள் உள்பட 90 ஆயிரம் பேருக்கு மாபெரும் கடனுதவி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.
இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.3,749 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசும் போது, "இந்த விழாவில் 23 ஆயிரத்து 800 பேருக்கு தனிநபர் கடனாக ரூ.1,828 கோடியும், தொழில் முனைவோருக்கு முத்ரா வங்கி மூலம் ரூ.2,904 கோடி கடனும் வழங்கப்பட்டிருக்கிறது. வங்கியை தேடி மக்கள் அலைகின்ற காலம் மாறி, மக்களை தேடி வந்து வங்கிகள் கடன் கொடுக்கின்ற நிலை தற்போது உருவாகி உள்ளது" என்றார்.
இதனிடையே விழாவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொழில்முனைவோருக்கு கடன் வழங்கிக்கொண்டுருந்த போது, கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் திடீரென தனக்கு கடன் கிடைக்கவில்லை என்றும், வங்கிகள் அலைக்கழிப்பதாகவும் கூறி கோஷமிட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Last October '22 when Bank Of Baroda informed defaulter’s spouse Sathish that he couldn't secure a fresh loan of ₹40 lakhs.
— Dr.SG Suryah (@SuryahSG) October 3, 2023
The reason? He had concealed an existing loan under his wife's name, which had gone unpaid.
Suddenly today Sathish decides to make a scene at Hon.… pic.twitter.com/0gaDMGRGQU
இதனை கேட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேடைக்கு வருமாறு கோஷமிட்ட சதீஷ் என்பவரை அழைத்தார். மேடையில் ஏறிய அந்த நபர் தான், கோவை கிராஸ்கட் ரோட்டில் தொழில் நிறுவனம் நடத்தி வந்தேன். கொரோனா காலத்தில் தொழில் நசிந்து மிகவும் பாதிக்கப்பட்டேன். தொழிலை மேம்படுத்த கடந்த 2½ ஆண்டுகளாக ரூ.40 லட்சம் கடனுக்காக வங்கிக்கு அலைந்து திரிகிறேன். அந்த வங்கி கடன் வழங்க மறுக்கிறார்கள் என்றார்.. இதை பொறுமையுடன் கேட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது குறித்து விசாரிப்பதாகவும், கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவரிடம் உறுதி அளித்தார். இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா, கடன் கேட்ட மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய தொழில் அதிபர் சதீஷ் குறித்து சில விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, கடந்த அக்டோபர் 22ஆம் தேதியே, பாங்க் ஆஃப் பரோடா, சதீஷின் மனைவி கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதால் புதிதாக ரூ.40 லட்சம் கடனைப் பெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
காரணம்? ஏற்கனவே வாங்கிய கடனை மனைவி பெயரில் மறைத்து வைத்திருந்தார். இன்று திடீரென்று சதீஷ் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்று இப்படி செய்கிறார். இந்த மாதிரியான சூழ்ச்சியானது திராவிட மாடல் அரசியலில் அடிக்கடி காணப்படும் தந்திரங்களை நினைவுப்படுத்துகிறது.
வேண்டுமென்றே கிரெடிட் கார்டு கடனை செலுத்தாததற்காக 2022 இல் கடனை மறுத்ததற்கு வங்கி நிர்வாகம் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டது. ஆனால் மத்திய அரசை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சதீஷ் தொடர்ந்து இப்படி பேசி வந்துள்ளார். இந்த சம்பவம் திமுக விழாவில் நடந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள்? அதனை எப்படி கையாள்வார்கள் என்று? எனினும், பாஜக தலைமையிலான மத்திய அரசின் நிகழ்வில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , அந்த சூழ்நிலையை மிகவும் மரியாதையுடன் சரியாகவும் கையாண்டார்"இவ்வாறு எஸ்ஜி சூர்யா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications