எம்எல்ஏ பதவியே பறிபோயிடும்.. சட்டசபைக்கு வெளியே அந்த 5 நிமிடம்.. செங்கோட்டையன் மனம் மாறியது எப்படி?
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடக்கும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கவே திட்டமிட்டிருந்தாராம். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தார் செங்கோட்டையன். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனாலும் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. 2 முறை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்த நிலையில், டிவிஷன் முறையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இரண்டிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவு - 63, எதிர்ப்பு - 154 வாக்குகள் பதிவானதால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
செங்கோட்டையன் திட்டம் என்ன
செங்கோட்டையன் மனம் இப்படி மாறியதற்கு கே.பி.முனுசாமி நடத்திய பேச்சுவார்த்தைதான் காரணம் என்கின்றனர். பேரவை கூடுவதற்கு முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தார். பேரவையில் கலந்து கொண்டார். கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்கள் செங்கோட்டையனிடம் பேசினார்.

அவரிடம் எந்த சலனமும் இல்லை. அதேசமயம், கேள்வி நேரத்தில் தனக்கான வாய்ப்பின் போது பேசிவிட்டு வெளியேறினார் செங்கோட்டையன். அதாவது கேள்வி நேரம் முடிந்ததும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திலும் அதனைத் தொடர்ந்து நடக்கும் வாக்கெடுப்பிலும் கலந்துகொள்வதை தவிர்க்கும் பொறுட்டே வெளியேறினார் அவர்.
அப்போது, அவர் வெளியேறியதும் கே.பி.முனுசாமியும் சபையை விட்டு வெளியே வந்தார். செங்கோட்டையனை சந்தித்தார். அப்போது, "நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக நீங்கள் பேச வேண்டும்; ஆதரவாக வாக்களிக்க வேண்டும்" என எடுத்துச் சொன்னார். அதற்கு செங்கோட்டையன், "கடந்த 1 மாதமாக பழனிச்சாமியின் அரசியலை நீங்கள் கவனித்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள். கட்சியில் எனக்கு எதிராக நான் சார்ந்த மாவட்டத்தில் சிலரை கொம்பு சீவிவிடுகிறார் பழனிச்சாமி.
இது சரிதானா? கட்சியில் எனக்கான மரியாதை என்ன இருக்கிறது? நான் பார்த்து வளர்ந்தவர் தானே அவர் ! என்னை ஒழிக்க அவர் திட்டமிடும்போது சில உண்மைகளை பேசவேண்டியதிருக்கிறது. எனக்கான அரசியலை நான் செய்யாமல் எப்படி இருக்க முடியும்?" என்று கேட்டிருக்கிறார். அப்போது, "நடப்பது எல்லாம் நான் பார்த்துதான் வருகிறேன். உங்களுக்காக அவரிடம் (எடப்பாடி) நான் பேசியிருக்கிறேன். உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது. அதனை மீண்டும் அவரிடம் பேசுவேன். நீர் அடித்து நீர் விலகலாமா? நம்முடைய உள்கட்சி பிரச்சனையை பேசித் தீர்க்கலாம். ஆனால், இன்றைக்கு நாம் கொடுத்துள்ள தீர்மானத்தை ஆதரித்து நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
அந்த 5 நிமிடம்
மற்றதையெல்லாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம். என்னை நம்புங்கள்" என்று 5 நிமிடம் அவரை சமாதானப்படுத்திய நிலையில், கே.பி.முனுசாமியின் சமாதானத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் அவைக்கு திரும்பிய செங்கோட்டையன் தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தார் செங்கோட்டையன் என்கின்றனர். அதேசமயம், அதிமுகவின் கொறடா, அதிமுக உறுப்பினர்கள் அனைவருக்கும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனை மீற விரும்பாமல் செங்கோட்டையன், ஓபிஎஸ் இருவரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். கொறடா உத்தரவை மீறினால் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்ய அதிமுக தரப்பில் வலியுறுத்தவும் முடியும். இதெல்லாம் இதன் பின்னணியில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications