மோடி தமிழ்நாடு வந்த சமயத்தில் என்ன நடந்தது? பாஜக ஏக குஷியாமே.. டெல்லிக்கு போன சீக்ரெட் ரிப்போர்ட்
சென்னை: பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த சமயத்தில் நடந்த விஷயங்கள் தொடர்பாக முக்கியமான ஒரு ரிப்போர்ட் டெல்லிக்கு சென்றுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நிலவும் சூடான அரசியல் சூழ்நிலைக்கு இடையில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். நேற்றும், நேற்று முதல்நாளும் அவர் தமிழ்நாட்டில் இருந்தார். கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டுமானத்திற்கு பின் நாள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையை 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும்.
அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவில் செல்ல முடியும்.
இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உளவு ரிப்போர்ட்: பிரதமர் மோடி தமிழ்நாடு வந்த சமயத்தில் நடந்த விஷயங்கள் தொடர்பாக முக்கியமான ஒரு ரிப்போர்ட் டெல்லிக்கு சென்றுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதன்படி சென்னையில் அவர் இறங்கிய போது வணக்கம் மோடி என்ற டிரெண்ட் பாஜக மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முறை கோ பேக் மோடியை விட வணக்கம் மோடி அதிக போஸ்டுகளை பெற்றது. பாஜகவின் ஐடிவிங் மிக தீவிரமாக செயல்பட்டு இந்த டிரெண்டிங்கை மேற்கொண்டது. இதை பற்றிய ரிப்போர்ட் டெல்லிக்கு சென்றுள்ளதாம். இந்த முறை நாம்தான் ஹேஷ்டேக் போரில் வென்றது என்று பாஜக ஏக குஷியில் இருக்கிறதாம்.
அதோடு பல்லாவரத்தில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் - மோடி புகழை பாடும் வகையில் திமுக - பாஜகவினர் மாறி மாறி கோஷம் எழுப்பினர். இந்த முறை திமுகவிற்கு இணையாக பாஜகவினர் கோஷம் எழுப்பினர். காரணம் வினோஜ் பி செல்வம் மூலம் ஏற்பாடும் செய்யப்பட்ட கூட்டம். அந்த அளவிற்கு கூட்டத்தை அவர் இறக்கி இருந்தார். இதை பற்றியும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.

பரவாயில்லையே.. இளம் தலைவர் பெரிய அளவில் கூட்டத்தை சேர்த்து இருக்கிறாரே என்று பாராட்டுக்கள் பறந்து உள்ளதாம். இதை பற்றியும் ரிப்போர்ட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதிலும் பாஜக தலைவர் அண்ணாமலை இல்லாமலே பாஜகவில் இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது பற்றியும் பாசிட்டிவ் ரிப்போர்ட் டெல்லிக்கு போய் இருக்கிறதாம். மோடி வருகையால்.. பாஜக வட்டாரத்தில் கொஞ்சம் பதற்றமான சூழ்நிலையே நிலவி வந்தது. கட்சியில் உட்கட்சி பிரச்சனை உச்சத்தில் உள்ள நிலையில் மோடி வருகையின் போது அதை மோடியிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று சிலர் திட்டத்தில் இருந்தனர். ஆனால் மோடி நிர்வாகிகள் யாரையும் தனியாக பார்க்கவில்லை.
பொதுவாக மோடி தமிழ்நாடு வந்தால் பாஜக நிர்வாகிகள் சிலரை அழைப்பார். அவர்களிடம் தனியாக அரசியல் தாண்டி குடும்ப விவகாரங்கள், பர்சனல் விஷயங்களை பேசுவார். அப்படித்தான் 8ம் தேதி இரவு பாஜக நிர்வாகிகளுடன் இவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடி நிர்வாகிகள் யாரையும் தனியாக சந்திக்கவில்லை.
இருப்பினும் இந்த உட்கட்சி விவகாரம் குறித்தும் அந்த ரிப்போர்ட்டில் தகவல்கள் இடம்பெற்று உள்ளனவாம்.












Click it and Unblock the Notifications