ஆனாலும் குசும்பை பாருங்களேன்.. கையில் "பூங்கொத்து".. எடப்பாடியை பார்த்தீங்களா? தீயாய் பரவும் போட்டோ
சென்னை: அதிமுக பொதுக்குழு நடக்குமா.. நடக்காதா என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சார்பாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் எடப்பாடி - ஓபிஎஸ் போட்டோ ஒன்று தீயாக பரவி வருகிறது.
அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார்.
ஆனால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடத்துவதில் திட்டவட்டமாக இருக்கிறார்.

திட்டவட்டம்
இந்த பொதுக்குழுவில் மொத்தம் 23 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும் என்கிறார்கள். தனியாக சிறப்பு தீர்மானம் என்ற பெயரில் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பொதுக்குழு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு பல ஆயிரம் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நேற்றே பார்வையிட்டனர்
அதிமுகவில் பொதுக்குழு நடக்குமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அப்படியே நடந்தாலும் அதில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. அதன்படி நேற்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஆர்பி உதயகுமார், கே.பி.முனுசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி, ஆகியோர் இந்த ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர். பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது என்று இவர்கள் மேற்பார்வையிட்டனர்.

இன்று மேற்பார்வை
இன்று எடப்பாடி பழனிச்சாமியின் மற்ற ஆதரவாளர்கள் சிலர் அதேபோல் வானகரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு எடப்பாடி ஆதரவாளர்கள்தான் முழுக்க முழுக்க பணிகளை செய்து வருகிறார்கள். ஓபிஎஸ் தரப்பு இந்த பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக அவரின் ஆதரவாளர்கள் யாரும் வானகரம் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

பெரிய ஏற்பாடுகள்
5000 பேர் சாப்பிடும் அளவிற்கு உணவுகள் தயார் செய்யப்படுகிறது. அவர்கள் தனியாக தண்ணீர் குடிக்க, குளிர்நீர் குடிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதோடு முக்கிய தலைவர்களை வரவேற்க அவர்களின் உருவங்கள் அடங்கிய பெயர் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பேனர்கள் போட்டோவை வைத்து உருவாக்கப்படாமல், ஓவியங்கள் போல அழகாக வரைந்து அதை வைத்து டிஜிட்டல் பேனர்களை உருவாக்கி உள்ளனர். இதில் ஒரு போட்டோதான் தீயாக பரவி வருகிறது.

போஸ்டர்கள்
அதில் எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் நட்பாக இருக்கும் போட்டோ ஒன்றும் உள்ளது. இதுதான் அரங்கின் வெளியே பெரிய அளவில் வரவேற்பு கட் அவுட் போல வைக்கப்பட உள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வத்திற்கு பூங்கொத்து கொடுப்பது போல வரையப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் மோதல் உள்ள நிலையில்தான்.. இப்படி பூங்கொத்து கொடுப்பது போல் ஓவியம் வைக்கப்பட்டு இருப்பது டிரெண்டாகி உள்ளது. இது எடப்பாடி ஆதரவு தரப்பு வைத்த கட் அவுட் ஆகும். இவ்வளவு மோதல் இருக்கும் நேரத்தில்.. எடப்பாடி ஆதரவாளர்களுக்கு குசும்பை பாருங்களேன் என்று கூறி இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications