கவர்னரிடம் வச்சேன்னு பார்த்தீங்களா? கார்ல வச்சேன் பாருங்க! கெஜ்ரிவால் ஸ்டைலில் விஜய் ஸ்விப்ட் அரசியல்
சென்னை: சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பில் விஜய் பயன்படுத்திய கார் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
டெல்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் எளிமையானவர். அவ்வப்போது மெட்ரோவில் பயணம் செய்ய கூடியவர். கோடிகளை சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தும் கூட அரவிந்த் கெஜ்ரிவால் எளிமையாக பயணம் செய்ய கூடியவர்.

அந்த வகையில் வேகன்ஆர் காரில் அடிக்கடி பயணம் செய்வார். முக்கியமான நிகழ்வுகள், பொது இடங்களுக்கு செல்ல வேகன்ஆர் காரை பயன்படுத்துவார். அவரின் இந்த செயல் பெரிதாக வரவேற்பை பெறக்கூடிய விஷயம் ஆகும்.
இப்போது அதே எளிமையை விஜய் தனது அரசியல் வாழ்க்கையில் கடைபிடிக்க தொடங்கி உள்ளார். அவர்களே, இவர்களே என்று பேச மாட்டேன் என்று கூறிய விஜய் .. அரசியல்வாதிகளை போல சொகுசு கார்களை பயன்படுத்தாமல் எளிமையான கார்களை பயன்படுத்த தொடங்கி உள்ளார்.
கவுன்சிலர் கூட ஆகாத அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜெர்மனி நாட்டு கார்களை பயன்படுத்தும் போது விஜய் அதை தவிர்த்து ஸ்விப்ட் காரில் போய் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்துள்ளார். பல கோடி மதிப்புள்ள கார்களைவிட்டுவிட்டு சாமானியர்களுக்கு நெருக்கமாக காட்டும் விதமாக விஜய் இப்படி செய்துள்ளார்.
அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், ஆடி கார்கள் கூட உள்ளன. ஆனால் அதை விடுத்து ஸ்விப்ட் காரில் போய் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் விஜய் இதேபோல் சைக்கிளில் சென்றார். அருகிலேயே இருப்பதால் எளிமையாக சென்றுவிடலாம் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது என்பதால் சைக்கிளில் சென்றதாக அப்போது விளக்கினார்.
இப்போது ஸ்விப்ட் காரில் சென்று மேலும் எளிமையை காட்டி இருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
விஜய் கோரிக்கை: தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம்.
எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். அவருக்கு எங்களின் நன்றி, என்று அறிக்கையில் கூறி உள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்து விஜய் பேசி உள்ளார். ஞானசேகரன் அரசியல் பின்னணியை பற்றி விசாரிக்க விஜய் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications