"குட்பை" திருச்சி கிழக்கு.. பெரம்பூர் எம்எல்ஏவாக விஜய் பதவியேற்றது ஏன்? பின்னணியில் அரசியல் கணக்கு
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் நேற்று பதவியேற்று கொண்டார். விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில பெரும்பூர் எம்எல்ஏவாக தொடர்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்ததன் பின்னணி பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. நேற்று விஜய் முதல்வராக பதவியேற்று கொண்டார். முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஒன்று பெரம்பூர். மற்றொன்று திருச்சி கிழக்கு.

முதல்வரான பிறகு விஜய் பெரம்பூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக தொடர முடிவு செய்தார். இதையடுத்து அவர் திருச்சி (கிழக்கு) சட்டசபை தொகுதியில் பெற்ற வெற்றியை அவர் முறைப்படி ராஜினாமா செய்தார். நம் நாட்டில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 70 இன் படி, எந்தவொரு நபரும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டசபையில் 2 தொகுதிகளின் உறுப்பினராக இருக்க கூடாது. இதனால் தான் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை கைவிட்டுள்ளார்.
பெரம்பூர் எம்எல்ஏவாக விஜய்
அதுமட்மின்றி பெரம்பூர் எம்எல்ஏவாக இருந்து கொண்டு திருச்சி கிழக்கு வெற்றியை விஜய் ராஜினாமா செய்ததன் பின்னணியில் முக்கிய அரசியல் கணக்கு ஒன்றும் உள்ளதாம். அதாவது பெரம்பூர் தொகுதி என்பது சென்னைக்குள் உள்ளது. இதனால் விஜய்யால் அடிக்கடி தனது தொகுதிக்கு சென்று வர முடியும்.
அதோடு 2011ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு சென்னையின் மிகப்பெரிய சட்டசபை தொகுதிகளில் ஒன்றாக இது உள்ளது. இது திமுகவின் கோட்டையாக உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் அதிமுக தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்தாலும் கூட இந்த தொகுதியில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. திமுகவே தொடர்ந்து வெற்றி பெற்றது.
திமுகவின் கோட்டையில் ஓட்டை
இந்த தொகுதிக்கு இதுவரை மொத்தம் 18 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 9 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 முறை அதிமுக, 3 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒருமுறை சுயேச்சை, இன்னொரு முறை சோசியலிஸ்ட் கட்சி, தற்போது தவெக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக 2019 இடைத்தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் திமுகவின் ஆர்டி சேகர் வெற்றி பெற்றார்.
தற்போது ஆர்டி சேகரை வீழ்த்தி விஜய் எம்எல்ஏவாகி உள்ளார். அதன்படி விஜய் மொத்தம் 1,20,365 வாக்குகள் பெற்று வாகை சூடினார். திமுக வேட்பாளர் ஆர்டி சேகர் 66,650 வாக்குகள் மட்டுமே பெற்று 53,715 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.இதனால் விஜய் இந்த தொகுதியை கைப்பற்றி உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செல்வாக்கு
மேலும் பெரம்பூர் தொகுதியில் புகழ்பெற்ற ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) அமைந்துள்ளது. இதன் ஊழியர்களும் இந்திய ரயில்வே ஊழியர்களும் பாரம்பரியமாக சிபிஎம் மற்றும் திமுகவை ஆதரிப்பவர்களாக இருந்து வருகின்றனர்.
இதனால் தான் 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொகுதியில் விஜய் ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதத்தில் நடக்கும்இடைத்தேர்தலில் தவெகவிற்கு பிரச்சனையாக மாறலாம் என்பதால் விஜய் இந்த தொகுதியின் எம்எல்ஏவாக தொடர்கிறார்.
திருச்சி கிழக்கு ராஜினாமா ஏன்?
அதேவேளையில் விஜய்யின் தவெகவிற்கு இருக்கும் செல்வாக்கை இன்னும் அதிகரிக்க விஜய் விரும்புகிறார். இதனால் அவர் சென்னைக்கு வெளியே உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் இன்னொருவருக்கு வாய்ப்பு வழங்கி வெற்றி பெற வைத்து செல்வாக்கை நிரூபிக்க விரும்புகிறார்.
இதனால் அடுத்த 6 மாதத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். அப்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்னொருவர் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார். மேலும் இந்த தொகுதியில் தவெக சார்பில் பலமாக வேட்பாளரை விஜய் அடையாளம் கண்டு வைத்துள்ளார். இது இன்னொரு காரணமாகும்.
திருச்சி கிழக்கு நிலவரம்
திருச்சி கிழக்கு தொகுதியை எடுத்து கொண்டாலும் கடந்த 2011ல் அதிமுகவின் ஆர் மனோகரன் வெற்றி பெற்றார். 2016ல் அதிமுகவின் வெல்லமண்டி நடராஜன் வென்றார். பிறகு 2021ல் திமுகவின் இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் மொத்தம் 91,381 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை சிட்டிங் எம்எல்ஏவாக எதிர்த்த திமுகவின் இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் வாங்கி 27,416 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் ராஜசேகரன் 19,715 வாக்குகள் வாங்கி 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் வேட்பாளர் கிருஷ்ணசாமி 4790 வாக்குகள் வாங்கி 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் 4 தேர்தல்களை எடுத்து கொண்டால் முறை அதிமுக, ஒரு முறை திமுக வென்ற நிலையில் இப்போது விஜய் வாகை சூடியுள்ளார். இதனால் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு செல்வாக்கான தொகுதி என்று கூற முடியாது. இதனால் திருச்சி கிழக்கில் பொருத்தமான வேட்பாளரை நிறுத்தினால் எளிதில் வெற்றி பெறலாம் என்று விஜய் கணக்கிட்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications