தீபாவளிக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்லாதது ஏன்? மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
சென்னை: தீபாவளிக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்லாதது ஏன்? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியிருப்பதோடு முதல்வர் ஸ்டாலினுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் கட்சியினர் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்றும் தேவாலயங்களுக்கும், மசூதிக்கும் செல்லத் தெரிந்த முதலமைச்சருக்கு தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என ஏன் தோன்றவில்லை என்று எல்,முருகன் வினவியுள்ளார்.

திமுக அரசை நரகாசுரர்கள் என்றும் 2026ஆம் ஆண்டு மே மாதம் வதம் செய்யப்படும் எனவும் எல்.முருகன் சாடினார். தமிழ்நாட்டில் அமைச்சரின் குடும்பத்தினரே தாக்கப்படுவதும், கோவில்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் நிகழ்வுகளுமே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு எனத் தெரிவித்தார்.
அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தனது உதவியாளருக்கு சிகிச்சை அளிக்கச்சென்ற இடத்தில் மருத்துவர்கள் இல்லாததை சுட்டிக்காட்டிய எல்.முருகன், சென்னை போன்ற இடங்களிலேயே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லையென்றால் ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளுக்கும், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கும் எப்படி கிடைக்கும் என வினவியுள்ளார்.
தமிழக சுகாதார கட்டமைப்பு எந்தளவு மோசமாக உள்ளது என்பதற்கு உதாரணம் நேற்று சென்னையில் நடந்த நிகழ்வு என தமிழக அரசை சாடியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். தீபாவளிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என்ற கேள்வியை நேற்று தான் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுப்பியிருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மட்டுமே வெகு விமரிசையாக கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications