ஈரோடு கிழக்கில் போட்டியிட தயங்கும் பாஜக! பின்வாங்குவது ஏன்? அண்ணாமலை - சிடி ரவி சொன்னது என்ன?
அதிமுக எதிர்க்கட்சியாக ஒன்றாக இருக்க வேண்டும். திமுக கூட்டணியை அப்போதுதான் எதிர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டை பாஜக எடுத்துள்ளது.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் இதே தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து தங்கள் சார்பாக வேட்பாளரை நிறுத்த பாஜக தயக்கம் காட்டி வருகிறது. இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக வேட்பாளர் குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதால் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்தே அண்ணாமலை இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்து உள்ளார். எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டு இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
அண்ணாமலை சிடி ரவி
இருவரையும் சந்தித்த அண்ணாமலை - சி டி ரவி இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் சிடி ரவி அளித்த பதிலில், பிப்ரவரி 7ம் தேதி வரை பொறுமையாக இருங்கள். திமுகவை எம்ஜிஆர் தீயசக்தி என்று கூறினார். ஜெயலலிதாவும் தீய சக்தி என்று கூறினார். அந்த தீய சக்திக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. மக்கள் நாளுக்கு நாள் திமுக மீதான ஆதரவை இழந்து வருகிறார்கள்.
ஒன்றாக நிற்க வேண்டும்
அதிமுக எதிர்க்கட்சியாக ஒன்றாக இருக்க வேண்டும். திமுக கூட்டணியை அப்போதுதான் எதிர்க்க முடியும். எதிர்க்கட்சியாக தனி தனியாக நிற்காமல் ஒன்றாக நில்லுங்கள் என்று சொல்லி இருக்கிறோம். அதுதான் பாஜகவின் விருப்பம். டெல்லியின் விருப்பம் அதுதான். எதிர்க்கட்சியாக நாம் ஒன்று இணைய வேண்டும் என்று கூறி உள்ளோம்.
பாஜக போட்டியா ?
திமுகவை வீழ்த்த, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் நிலை; பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அனுப்பிய செய்தியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் எடுத்துரைத்தோம். அது என்ன என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது, என்று சிவி ரவி கூறினார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன? பாஜக போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு சிடி ரவி.. பிப்ரவரி 7ம் தேதி வரை நமக்கு நேரம் இருக்கிறது என்று மழுப்பலாக கூறினார்.
மீண்டும் மீண்டும் கேள்வி
இதையடுத்து மீண்டும் ஒரு செய்தியாளர் ஒருவர்.. அதிமுக நிலைப்பாடு இருக்கட்டும்.. பாஜகவின் நிலைப்பாடு என்ன.. நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டார். இதற்கும் மழுப்பலாக பதில் அளித்த சிடி ரவி.. பிப்ரவரி 7ம் தேதி வரை நேரம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம், என்று சிடி ரவி கூறினார். பாஜக போட்டியிடுவது பற்றி அவர் பதிலே சொல்லவில்லை. எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும் என்று மட்டும்தான் சொன்னார்.
சீக்ரெட்
மொத்தத்தில் பாஜக இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவை திட்டிவிட்டு பாஜக தனது வேட்பாளரை அறிவிக்காமல் பின்வாங்குவது ஏன் என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. பாஜகதான் தன்னை உண்மையான எதிர்க்கட்சி என்று கூறி வருகிறது. அப்படி இருக்கும் போது பாஜக வேட்பாளரை நிறுத்த தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கில் போட்டியிட்டால் வாக்கு வங்கி சரியும், 10% வாக்குகள் உள்ளது என்று பாஜக வைக்கும் கருத்து அடிபட்டு போகும், பாஜகதான் எதிர்க்கட்சி வைக்கும் வாதத்திற்கு சிக்கல் ஏற்படும் என்று அந்த கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதா? அல்லது திமுகவை ஒன்று சேர்த்து எதிர்க்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.