அரக்கோணம்- சென்னை.. 2 ஸ்டேசனில் நிற்காமல் போன மின்சார ரயில்.. லோகோ பைலட் பதிலால் ஆடிப்போன பயணிகள்
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் அபாய சங்கிலையை இழுத்து பிடித்து நிறுத்தியதுடன், லோகோ பைலட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோகோ பைலட் சொன்ன பதில் தான் ஆச்சரியமானது..
சென்னையில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்கள் தான், சென்னை புறநகர் பகுதியில் வாழும் பல லட்சம் மக்களுக்கு முக்கியமான போக்குவரத்து இணைப்பாக உள்ளது.

இதில் சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை கடற்கரை-அரக்கோணம் வழித்தடம் என்பது மிகவும் முக்கியமான வழித்தடங்களில் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்கள் வடசென்னை மக்களுக்கும், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தினமும் சென்னை வந்து வேலை செய்வோருக்கு இந்த ரயில்கள் தான் இதயமாக உள்ளன.
இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 6.40 மணியளவில் சென்னை சென்ட்ரல் நோக்கி புறநகர் மின்சார ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலானது அரக்கோணம் - திருவள்ளூர் வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்வது வழக்கமாகும். இந்தநிலையில் அரக்கோணம் அடுத்துள்ள புளியமங்கலம், மோசூர் ரயில் நிலையங்களில் மின்சார ரயில் நிற்காமல் சென்றது. இதனால் அந்த ரயில் நிலையங்களில் இறங்க வேண்டிய பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். ஆனால் ரயில் உடனே நிற்கவில்லை.. அடுத்ததாக உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நின்றது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நேராக ரயில் என்ஜினை நோக்கி ஆவேசத்துடன் சென்றனர். ஏன் ரயிலை நிறுத்தவில்லை என்று லோகோ பைலட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பயணிகளிடம், லோகோ பைலட் நான் புதிதாக இந்த மார்க்கத்தில் ரயிலை இயக்க வந்துள்ளேன். எனவே மேற்கண்ட ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும் என்பது தெரியவில்லை என கூறி தவறுக்கு மன்னிப்பு கோரினாராம். இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு விரைந்து வந்த ரயில்வே போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தனர். அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து ரயிலில் ஏறினார்கள். தொடர்ந்து மின்சார ரயில் சென்னை சென்ட்ரல் நோக்கி புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications