அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்தே விரட்டப்பட்ட ஜாகீர் உசேன்.. மிக உயரிய பதவி தந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முழுக்க உள்ள 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக பரதநாட்டியக் கலைஞர் அ.ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு முழுக்க கலை பண்பாட்டு துறை மூலம் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக நேற்று அ.ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேற்று அ.ஜாகீர் உசேன் வாழ்த்து பெற்றார்.
கடந்த மாதம்தான் ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியேற விரட்டப்பட்டார். இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் தற்போது ஜாகீர் உசேனுக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோவில்
கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்துவதற்காக பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் சென்று இருந்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவர் தனது பெரியம்மா வீட்டில்தான் வளர்ந்தார். இந்து பெண்மணியான அவரின் வளர்ப்பு காரணமாக ஜாகீர் உசேன் இந்து மத வழிபாட்டில் ஆர்வம் கொண்டார். ஜாகீர் உசேனின் பெரியம்மா தீவிரமான பெருமாள் பக்தர். இதனால் சிறு வயதில் இருந்தே பெருமாள் கோவில்களுக்கு சென்று ஜாகீர் உசேன் வழிபாடு நடத்தி இருக்கிறார்.

ஜாகிர் உசேன் பெருமாள்
இதே தாக்கத்தால் ஜாகீர் உசேன் பரதநாட்டியமும் கற்றுக்கொண்டார். இந்து புராணங்களை படித்து அதில் இருக்கும் பாடல்கள், கதைகளுக்கு இவர் பரத நாட்டியம் ஆடி பல அரங்கேற்றங்களை செய்து இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் ஸ்ரீரங்கம் கோவிலில் பெருமாளை வழிபட சென்ற போது கோவிலில் இருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்ற நபர் ஜாகிரை உள்ளே அனுமதிக்காமல் வெளியே துரத்தினார். பலருக்கு முன்பாக வெளியே போ என்று கோபமாக கத்தி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அவமதிப்பு
பொதுவாக சில இந்து கோவில்களில் குறிப்பிட்ட தூரத்திற்கு பின்பாக இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஆனாலும் ஜாகீர் உசைன் சிறு வயதில் இருந்தே பெருமாளை வழிபாட்டு வளர்ந்தவர் என்பதால் அந்த பக்தியில் கடவுளை வழிபட சென்று இருக்கிறார். ஆனால் அங்கு இருந்த நரசிம்மன் அவரை உள்ளே விடவில்லை. இது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு இருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டு இருந்தார்.

சர்ச்சை
இந்த சம்பவம் குறித்து ஜாகீர் உசைனும் உருக்கமாக பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தார். அதில், நான் என் தாய்வீடாக கருதும் , தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன் . காரணம் என் பெயர் .. முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு , பல அவமானங்களுக்கிடையே துரத்தப் பட்டேன் ..

காயம்
இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும் . ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. என்னை துரத்தியவன் ஒரு நடத்தை கெட்டவன் மட்டுமல்ல . இந்நாட்டின் இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் எதிரானவன் .. காலம் , திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும் . அரங்கன் என்றும் எமக்குத் துணை.. என்று ஜாகீர் உசைன் குறிப்பிட்டு இருந்தார்.

ஜாகிர் உசேன் நியமனம்
இந்த சமபவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்தான் தற்போது தமிழ்நாடு முழுக்க உள்ள 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்றுத்தரக்கூடிய அரசு இசைப்பள்ளிகள் தமிழ்நாடு முழுக்க உள்ளன. இதற்கு கலையியல் அறிவுரைஞராக ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் நியமனம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications