திமுக அதே திமுகதான்.. தெறிக்கவிட்ட துரைமுருகன்.. பணிந்த கூட்டணி கட்சிகள்.. பரபர பின்னணி
Recommended Video

சென்னை: எதையும் யோசிக்காமல் பேசக்கூடியவர் அல்ல திமுக பொருளாளர் துரைமுருகன். அவரே இப்படி பேசினார் என்றால், அதன் பின்னணி என்னவாக இருக்கும்..? என்ற பேச்சு கடந்த வாரத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இடையே இலை மறைகாயாக விவாதிக்கப்பட்டு வந்தது.
தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த துரைமுருகன், திமுக கூட்டணியில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என்று தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தான் இவ்விரு கட்சிகளும் போட்டியிட போகின்றன, என்று இத்தனை நாட்களாக அனைவரும் நினைத்து இருந்த நிலையில் துரைமுருகனின் இந்த திடீர் யூ டர்ன் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சும்மா பேசுபவர் இல்லை
ஒருவழியாக அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை, திருமாவளவனும், வைகோவும் ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்துப் பேசிய பிறகு, இந்த நெருப்பு நீரூற்றி அணைக்க பட்டு உள்ளது. ஆனால் முதலில் நாம் கூறியதை போல, துரைமுருகன் சும்மா பேசியிருக்க மாட்டார் என்பது தான் வைகோ மற்றும் திருமாவளவன் மனதில் உறுத்திக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் கேட்டபோது அவர்கள் கூறிய தகவல் சுவாரசியமானது.

ஜீரணிக்க முடியவில்லை
கருணாநிதி இருந்தபோது திமுக ஒரு சூரியனைப்போல நடுநாயகமாக இருந்தது. அதை சுற்றி வரும் கோள்களை போல பிற கட்சிகள் இயங்கின. கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஆளாளுக்கு தனி ஆவர்த்தனம் நடத்தி வருவது கட்சி தலைமைக்கு பிடிக்கவில்லை. அதிலும், சூப்பர் சீனியர் துரைமுருகனால் இதை ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. திமுக இன்னும் அதே திமுக தான் என்பதை இந்த கட்சிகளுக்கு காட்டியாக வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்தார்.

திருமா அதிரடி அறிவிப்பு
இந்த நிலையில்தான் வரும் லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று திருமாவளவன் அளித்த பேட்டி, துரைமுருகனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருந்திருந்தால், திமுக தலைமையுடன் ஆலோசிக்காமல் தொகுதி பெயரை அறிவித்து இருக்க முடியாது. அப்படி அறிவித்துவிட்டதால் திமுக கூட்டணியில், விசிக இல்லை என்று தானே அர்த்தம் என்று கட்சி சீனியர்களிடம் கடுகடுத்துள்ளார் துரைமுருகன்.

திமுக எப்பவும் திமுக
சிதம்பரம் தொகுதி தான் வேண்டும், அப்போதுதான் திமுக கூட்டணியில் இருக்க முடியும் என்பதை திருமாவளவன் மறைமுகமாக தெரிவித்து விட்டதாகவே திமுகவில் உள்ள தலைவர்கள் முணுமுணுத்தனர். இதை உணர்ந்திருந்த துரைமுருகன் தடாலடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கூட்டணியில் இல்லை என்று கூறிவிட்டார். திமுக தலைமையின் உறுதித்தன்மையை பார்த்த திருமாவளவனும், இறங்கிவந்து ஸ்டாலினை சந்தித்து சென்றுள்ளார். "நாங்கள் கலைஞரின் வளர்ப்பில் வந்தவர்கள் என்பதை துரைமுருகன் நிரூபித்து விட்டார். திமுக என்றுமே அதே திமுக தான்" என்று புன்முருவல் செய்கிறார் திமுக சீனியர் தலைவர் ஒருவர்.

துரைமுருகன் திட்டம்
இதேபோலத்தான், லோக்சபா தேர்தலில், மதிமுக தனக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறது. ஒருபக்கம் சிதம்பரம் உட்பட இரு தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கேட்கும் நிலையில், நான்கு தொகுதிகளை மதிமுக கேட்பதால் அதிர்ச்சியில் உள்ளது திமுக தலைமை. லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம், அடுத்து மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால் அதில் முக்கிய பங்காற்ற முடியும். மீண்டும் திமுக தனது பழைய செல்வாக்கை ஈட்ட முடியும் என்று ஸ்டாலின் கணக்கு போடும் நிலையில் அதிக தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்பதால் எரிச்சலில் உள்ள துரைமுருகன், மதிமுக எங்கள் கூட்டணியில் இல்லை என்று ஒரே போடாக போட்டார், என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துரைமுருகனின் இந்த அதிரடியால், தொகுதி பங்கீடு விவாதத்தின் போது திமுக கைதான் ஓங்கி இருக்கப்போகிறது என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications