அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை குறி வைத்தது ஏன்? - பின்னணி உடைக்கும் திமுக செய்தி தொடர்பாளர்!
சென்னை: பாஜக ஆளும் குஜராத்தில் 4 பாலங்கள் இடிந்துள்ளன, அங்கு நடந்த ஊழல்களை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தைரியம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வேகத்தை குறைப்பதற்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்துகிறது என திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, விழுப்புரத்தில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி எம்.பி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பொன்முடி வீட்டில் ரெய்டால் பரபரப்பு: அண்மையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பொன்முடி மீதான அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் அமலாக்கத்துறை ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், "பொன்முடி வீட்டில் நடத்தப்படும் அமலாக்கத்துறை ரெய்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. திமுக மீது பாஜகவுக்கு கோபம், வெறுப்பு இருக்கிறது. பாஜக எதிர்ப்பு நடவடிக்கையை திமுக குறைத்துக்கொள்ளவேண்டும் என அச்சுறுத்தும் நடவடிக்கையாக சோதனை நடைபெறுகிறது. 2 வழக்குகளில் பொன்முடி குற்றமற்றவர் என்று வெளியே வந்த நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
பாஜகவின் அரசியல் பழிவாங்கல்: தங்களுக்கு எதிராக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை அடக்கி ஒடுக்கிவிட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம். எதிர்கட்சிகளை வேண்டுமென்றே பயமுறுத்துவதற்காகவே மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளது. இதற்கெல்லாம் அஞ்சும் இயக்கம் திமுக அல்ல. பாஜகவுக்கு எதிரான கொள்கை ரீதியான யுத்தத்தை திமுக இன்னும் வீரியத்துடன் மேற்கொள்ளும்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியுள்ள அவர், "குஜராத்தில் அரசு கட்டிய 4 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஆனால், பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்த ஊழல்களை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தைரியம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வேகத்தை குறைப்பதற்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்துகிறது.
அடிக்க அடிக்க எழுவோம்: எந்தவொரு குற்றச்சாட்டும் இப்போது இல்லாத நிலையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில் தற்போது சோதனை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நேரத்தில் எதிர்க்கட்சிகளிடத்தில் பயத்தை உண்டாக்க நினைக்கிறது பாஜக.
யார் யாரெல்லாம் எங்களை எதிர்க்கிறீர்களோ அவர்களும் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்கிற பாஜக அரசின் யதேச்சதிகார போக்குதான் இது. நேருக்கு நேர் கொள்கைகளால் செயல்பாடுகளால் பதில் சொல்ல முடியாத பாஜக, திமுகவை ரெய்டுகளின் மூலம் வாயை அடக்க நினைக்கிறது. திமுக அடிக்க அடிக்க எழும். திமுக எந்த நடவடிக்கைக்கும் அஞ்சாமல் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications