எடப்பாடி பழனிசாமிக்கு வந்த தர்மசங்கடம்.. "சைலண்ட்"டாக வந்து சென்றதன் பின்னணி என்ன?
எடப்பாடி பழனிசாமி ஏன் பசும்பொன் செல்லவில்லை என்ற காரணம் கசிந்துவருகிறது
சென்னை: எப்போதும் இல்லாமல், இன்றைய தினம் சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்..!
பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா.. அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... வழியெல்லாம் வாகனத்தை நிறுத்தி மக்களை சந்தித்து பேசினார். தொண்டர்கள் அதிமுக, அமமுக கொடிகள் என இரண்டையுமே ஏந்தி முழக்கமிட்டனர்..
ஆனால், கடந்த 2, 3 நாட்களாகவே பசும்பொன்னுக்கு நேரடியாக எடப்பாடி பழனிசாமி செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.. திடீரென பசும்பொன் தேவர் குறித்த ஒரு ட்வீட்டை பதிவிட்டார்.

கொள்கை
''தேச விடுதலைக்காக பெரும்படை திரட்டிய தென்னாட்டு சிங்கம், தலைசிறந்த பேச்சாளர்,பக்திமான், தேசியம், தெய்வீகம், வீரம், விவேகம், உண்மை, உறுதி இதனையே தனது கொள்கையாக கொண்டிருந்த தெய்வதிருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்'' என்று பதிவிட்டதுமே, எடப்பாடி பசும்பொன்னுக்கு செல்லவில்லை போலும் என்ற யூகிக்கப்பட்டது.

மரியாதை
வழக்கமாக, கட்சியின் இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு ஒவ்வொரு வருடமும் மரியாதை செலுத்தி வந்தனர். இப்போதுதான் முதல்முறையாக தனித்தனியாக மரியாதை செலுத்த நேரிட்டுள்ளது. இதற்கு காரணம் சசிகலா முன்கூட்டியே பசும்பொன் செல்ல தயாராகிவிட்டார்.. முக்குலத்தோரின் வாக்கு வங்கியை பலப்படுத்தி கொள்ளவும், அதே சமயம் அதிமுகவில் தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்தி கொள்ளவும், சசிகலாவின் 2வது இன்னிங்ஸ் துவங்கப்பட்டுள்ளது..

இடஒதுக்கீடு
அதற்காகவே தென்மண்டலத்தை நோக்கி காய் நகர்த்தி உள்ளார்.. அதற்கு தேவர் ஜெயந்தி விழா பிள்ளையார் சுழியாக அமையும் என்று தெரிகிறது. ஏற்கனவே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மீது தென்மண்டலத்தில் அதிருப்தி உள்ளதாக கூறப்பட்டது.. மேலும் கொங்குவுக்கே அதிக முக்கியத்துவம் வருவது குறித்தும் தென்மண்டல அதிமுக நிர்வாகிகளுக்கு வருத்தம் ஏற்கனவே இருந்து வருவதாகவும் தெரிகிறது..

அதிருப்தி
எடப்பாடி பழனிசாமியின் மீதான இந்த அதிருப்தியை, தன்பக்கம் அறுவடை செய்து கொள்ள சசிகலா மற்றும் ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எனவேதான், எடப்பாடி பழனிசாமியை முக்குலத்தோருக்கு எதிரானவர் என்கிற முத்திரையை குத்த இந்த தேவர் ஜெயந்தி வாய்ப்பை சசிகலா, ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தி கொள்ள முயல்வதாக கருதப்படுகிறது. ஒருபக்கம் சசிகலாவின் எழுச்சி, மறுபக்கம் ஓபிஎஸ்ஸின் வெளிப்படையான விமர்சனத்துக்கு நடுவில் எடப்பாடி பழனிசாமி சற்று குழம்பியே உள்ளதாக தெரிகிறது..

தர்மசங்கடம்
மேலும் நேருக்கு நேர் எதிர்தரப்பினை சந்திக்க நேரிட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கமும் இருந்திருக்கலாம்.. அதுமட்டுமல்ல, ஆளுநரை சந்தித்துவிட்டு வந்து "சசிகலாவை சூரியனை பார்த்து குறைக்கும்" என்று பேட்டி தந்ததும், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு, அதிமுகவில் முக்குலத்தோர் முக்கியத்துவம் குறைந்தது போன்ற காரணங்களால் சில அமைப்புகள் எடப்பாடியாருக்கு கருப்புக் கொடி காட்டவும், முற்றுகையிடவும், பிரச்சனை செய்யவும் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அட்மிட்
எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாமல் தவிர்த்ததற்கு இதுவும் காரணம் என்று கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்துதான் குருபூஜை விழாவை எடப்பாடி புறக்கணித்திருக்கலாம் என்றும் அதற்காகவே குடலிறக்க ஆபரேஷனை தொடர்ந்து, திடீரென ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி மருத்துவ பரிசோதனையை எடப்பாடி மேற்கொண்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி ஆஸ்பத்திரியில் நேற்று அட்மிட் ஆனதுமே, பசும்பொன்னில் அவர் கலந்து கொள்ள மாட்டாரா என்று மாஜி அமைச்சர் உதயகுமாரிம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. "எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலம் சரியில்லை... ஏற்கனவே குடலிறக்க நோய்க்காக அறுவை சிகிச்சை செய்தவர்... அவர் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கிறது... எந்த நேரம் வேண்டுமானாலும் கூடுதல் சிகிச்சை அவருக்குத் தேவைப்படலாம். அதனால், அவர் வரவில்லை" என்று பதிலளித்ததையும் கவனிக்க வேண்டி உள்ளது.

புறக்கணிப்பு
அதேசமயம், முற்றிலுமாக விழாவை புறக்கணித்துவிட்டால், அது தென்மண்டல மற்றும் முக்குலத்தோர் மக்களிடையே மேலும் தனக்கு அதிருப்தியை விளைவித்து விடும் என்பதையும் எடப்பாடி உணராமல் இல்லை.. அதற்காகவே, சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். ஆனால், செய்தியாளர்களிடம் எதுவுமே பேசாமல் மவுனமாக புறப்பட்டு சென்றுவிட்டார். இருந்தாலும், சசிகலாவை எத்தனை காலத்துக்கு இப்படி நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்க முடியும் என்ற கேள்வியும் இயல்பாய் அதிமுக தொண்டர்களிடம் எழத்தான் செய்கிறது.












Click it and Unblock the Notifications