"விடமாட்டேன்".. உதயநிதியை டார்கெட் செய்யும் எடப்பாடி பழனிசாமி... இதுதான் காரணமா?.. எகிறும் களம்
உதயநிதியை எடப்பாடி டார்கெட் செய்ய என்ன காரணம் என்ற விவாதம் கிளம்பி உள்ளது
சென்னை: உதயநிதி ஸ்டாலினை சமீப காலமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவினர் டார்கெட் செய்து வருவதாக கூறப்படுகிறது.. இது உண்மையா? அதற்கான காரணங்கள் என்ன?
உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து வருகிறது.. இதில் திமுக ஆரம்பம் முதலே மும்முரமாகி உள்ளது.. அதேபோல திமுகவைவிட அதீத ஆர்வம் காட்டி வருகிறது அதிமுக..
அதற்கான தீவிரத்தையும் கையில் எடுத்து வருகிறது.. திமுகவை வென்று காட்டுவது என்ற முனைப்பிலும் ஈடுபட்டு வருகிறது.. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பேச்சுக்கள் கவனத்தை பெற்று வருகின்றன. அந்த வகையில், ராணிப்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது:

விமர்சனம்
"அதிமுகவில் உண்மையாக உழைக்கும் யாரும் உயர்ந்த பதவிக்கு வரலாம்... அதுவே திமுகவில் வர முடியுமா? திமுகவில் கருணாநிதி, அதற்குப் பிறகு அவரின் மகன்.. குரங்கு குட்டி தாவி போகுமே.. அதுபோல உதயநிதி என்ற குட்டியும் தாவிப் போய்க்கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்கள்கூட உதயநிதியிடம் கையை கட்டிக்கொண்டு பேசிக் கொண்டிருப்பதையெல்லாம் சட்டமன்றத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்... அந்த அமைச்சரின் பேரன் வயதிருக்கும் உதயநிதியிடம் கையை கட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்" என்று காட்டமாக பேசியிருந்தார்.

கேபி முனுசாமி
2 நாளைக்கு முன்பு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தன் பிரச்சாரத்தில் பேசியபோது, "அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் முதல்வரை சந்திக்கிறார்களோ இல்லையோ, உதயநிதியை சந்தித்து வணக்கம் சொல்கிறார்கள்... ஸ்டாலின் முதல்வரா இல்லை உதயநிதி முதல்வரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்று விமர்சித்திருந்தார். ஆனால், கேபி முனுசாமியின் பேச்சைவிட எடப்பாடியின் பேச்சே தற்போது விவாதமாக கிளம்பி உள்ளது. எடப்பாடி எதற்காக உதயநிதியை டார்கெட் செய்கிறார் என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.

ஆர்ப்பாட்டங்கள்
உதயநிதியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் பேசப்பட்டு வருகின்றன.. அதற்கேற்றபடி அவருக்கான முக்கியத்துவமும் கட்சிக்குள் அதிகரித்து கொண்டே வருகிறது.. உதயநிதியின் ஆய்வுகள், பேட்டிகள், ட்வீட்கள் அனைத்தும் பிற கட்சி தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் திமுக இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது..

முக்கியத்துவம்
இதனால் எம்எல்ஏ என்பதையும் தாண்டி தனிப்பட்ட முறையிலும் உதயநிதிக்கான செல்வாக்கு உயர்ந்து வருவதாக கருதப்படுகிறது. எனவேதான், உதயநிதியை நேரடியாகவே எடப்பாடி டார்கெட் செய்வதாகவும், இப்படி செய்வதால் தனக்கான முக்கியத்துவமும் களத்தில் அதிகரித்தபடியே இருக்கும் என்று அதிமுக மேலிடம் கணக்கு போடுகிறதாம்... அதாவது ஸ்டாலின் Vs எடப்பாடி என்பதற்கு பதிலாக உதயநிதி Vs எடப்பாடி என்ற ரீதியில் களம் மாறுபடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறதாம்..

உதயநிதி
நீட் விவகாரத்தில் உதயநிதி சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது முதல் வாரிசு அரசியல்வரை ஒன்றுவிடாமல் விமர்சிப்பதால், அது அவர் மீதான இமேஜை குறைக்கும் என்று வலுவாகவும் நம்பப்படுகிறதாம்... அதேசமயம் உதயநிதி டார்கெட் செய்யப்படுவதை திமுக தரப்பு வரவேற்கவே செய்கிறது.. ஒரு முன்னாள் முதல்வரே, அதுவும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரே உதயநிதியை விமர்சிக்கிறார் என்றால், அது உதயநிதிக்கான வளர்ச்சிதான் என்று பாசிட்டிவ்வாக அணுகுகிறார்கள்..

செங்கல்
இது இப்போது என்றில்லை, எய்ம்ஸ் விவகாரத்தில் செங்கல்லை கையில் எடுக்கும்போதே தேசிய அளவில் உதயநிதி கவனம் பெற்றுவிட்டதாக திமுக மேலிடம் கருதுகிறது.. அதனால்தான், அமித்ஷாவும், மோடியும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தபோதுகூட, உதயநிதியின் பெயரை சொல்லி விமர்சித்து பேசியதையும் நினைவுகூர்கிறார்கள்... அதேசமயம், உதயநிதியின் நீட் விவகார பேச்சு தற்போது வரை திமுகவுக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

எதிர்பார்ப்பு
அதுமட்டுமல்ல, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தமிழக பட்ஜெட் தாக்கலின் போது பல எம்எல்ஏக்கள் எழுந்து வந்து உதயநிதி ஸ்டாலினிடம் வணக்கம் சொல்லிவிட்டு தங்கள் இருக்கைக்கு சென்ற வீடியோ வைரலானதையும் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது. இப்படி இருவிதமான அபிப்பிராயங்கள் உதயநிதி மீது இருந்தாலும், அவரை தொடர்ந்து விமர்சிப்பதால் எடப்பாடி பழனிசாமியின் இமேஜ் மேலும் ஏறுமா? அல்லது இத்தகைய பகிரங்க விமர்சனங்களால் உதயநிதியின் இமேஜ் குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications