எடப்பாடியின் “மாஸ்டர் பிளான்”.. ஆபரேசன் “இலை” - அண்ணாமலையுடன் பகை? 2 மதுரை தாமரைகளை இழுத்த அதிமுக
“எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பாஜக மீது அதிருப்தி இருப்பதன் காரணமாகவே அக்கட்சியில் இருந்து விலகி வரும் பிரமுகர்களை விமர்சித்து வருவதாக தெரிவித்து வருகிறார்கள்”
சென்னை: பாஜகவுடன் 2024 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தாலும், தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகி வரும் மூத்த நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. டாக்டர் சரவணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கு இடையிலான ஒற்றுமையை பார்ப்போம்.
தமிழ்நாடு பாஜகவில் கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து உட்கட்சி குழப்பங்களும், தலைமைக்கு எதிரான குரல்களும் ஒலிக்கத் தொடங்கி தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன.
குறிப்பாக திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், திருச்சி சூர்யா சிவா, நடிகை காயத்ரி ரகுராம், நிர்மல் குமார் என மக்களால் அறியப்பட்ட பாஜக பிரமுகர்கள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.

அண்ணாமலை மீது விமர்சனம்
இதில் சூர்யா சிவாவை தவிர மற்ற 3 பேருமே அண்ணாமலையை விமர்சித்துவிட்டு பாஜகவில் இருந்து விலகியவர்கள்தான். இதை முதலில் தொடங்கி வைத்தவர் டாக்டர் சரவணன். 2021 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து தேர்தலில் தோல்வியடைந்த அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டார்.

டாக்டர் சரவணன்
இந்த நிலையில் அந்த நாள் இரவு பிடிஆரை நேரில் சந்தித்து பேசிய திருப்பரங்குன்றம் சரவணன், மதவாத அரசியலை பாஜக செய்வதாக குற்றம்சாட்டினார். பாஜக வீடியோவுக்காக பெயர்பெற்ற கட்சி என்று கூறிய அவர், அண்ணாமலையால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று குற்றம்சாட்டினார்.

அதிமுகவில் இணைந்தார்
டாக்டர் சரவணன் மூலம் பிடிஆரை சந்தித்து பேசியபோது திமுக கரை வேஷ்டியுடன் காணப்பட்டார். மீண்டும் திமுகவில் அவர் இணைவார் என்று கூறப்பட்டது. மீண்டும் திமுகவில் தன்னை சேர்த்துக்கொள்ளுமாறு அவர் விடுத்த கோரிக்கையை கட்சித் தலைமை ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் அதிமுகவில் இணைந்து இருக்கிறார்.

அதிமுகவில் நிர்மல் குமார்
இவரை தொடர்ந்து கட்சியில் இருந்து விலகிய சூர்யா சிவா மற்றும் காய்த்ரி ரகுராம் வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை. அதே நேரம் நேற்று பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் ஐடி விங் மாநில தலைவர் நிர்மல் குமார் உடனே எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து உள்ளார்.

அண்ணாமலை மீது கடும் விமர்சனம்
அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல், 420 மலை, மனநலம் குன்றியவர் போல் நடந்துகொள்கிறார், பாஜகவினரை செருப்பாக பயன்படுத்துகிறார் என காட்டமான விமர்சனங்களை முன்வைத்து அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக தேசிய தலைமையிடம் புகாரளித்துவிட்டதாகவும் நிர்மல் குமார் ஒன் இந்தியா தமிழுக்கு தெரிவித்தார்.

அதிமுகவில் இணைந்தது ஏன்?
அதிமுகவில் இணைந்தது குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், "பல கஷ்டங்கள் பல பிரச்சனைகளை தாண்டி அதிமுகவை 2017 ல் இருந்து கட்டி காப்பாற்றியவர் எடப்பாடியார். இந்த காலத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் எடப்பாடி அவர்கள்தான் எதிர்காலமாக இருப்பார். அவரால்தான் முடியும். வேறு யாராலும் முடியாது. அந்த நம்பிக்கை எடுக்க வலுவாக உள்ளது." என்றார்.

எடப்பாடியின் பிளான்
அதே நேரம் கூட்டணி கட்சியில் இருப்பவர்களையே, அது அக்கட்சியின் தலைவரை விமர்சித்துவிட்டு வெளியில் வருபவரையே அதிமுகவில் சேர்க்கும் எடப்பாடி பழனிசாமி சேர்ப்பதன் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அதற்கு முதன்மை காரணம் நிர்மல் குமார், டாக்டர் சரவணன் இருவருமே மதுரையை சேர்ந்தவர்கள் என்பதுதானாம்.

தென் மாவட்ட ஆதரவு
ஓபிஎஸ் உடனான மோதலால் மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடப்பாடிக்கு பலம் குறைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அந்த மாவட்டங்களில் அதுவும் ஓ.பி.எஸ் இன் சமூகத்தை சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்களை கட்சியில் இணைப்பதால் தென் மண்டலத்திலும், முக்குலத்தோர் மக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகும் என்று நினைத்திருக்கலாம் என்கிறார்கள்.

திறமை
நிர்மல் குமார் ஐடி விங் தலைவராக இருந்த தமிழ்நாடு பாஜகவை சமூக வலைதளங்களில் பிரபலமாக்கியவர். ஐடி பிரிவில் அவரது அனுபவம் அதிமுகவுக்கு பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்த்து இருக்கலாம். மதுரை சரவணனும், அந்த மாவட்டத்தில் நன்கு அறியப்பட்ட முகமாவார். இலவச மருத்துவம் உட்பட பல்வேறு சேவைகளை செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என்பதும் அவரை கட்சியில் இணைக்க முக்கிய காரணம்.

அண்ணாமலையுடன் மோதலா?
இது அல்லாமல் ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பாஜக மீது அதிருப்தி இருப்பதன் காரணமாகவே அக்கட்சியில் இருந்து விலகி வரும் பிரமுகர்களை விமர்சித்து வருவதாக தெரிவித்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தேர்தல் பணிமனையிலும் பாஜக தலைவர்கள் பெயர் இடம்பெறாதது போன்றவற்றை இதற்கான காரணமாக அடுக்குகிறார்கள்.












Click it and Unblock the Notifications