இன்றுடன் முடிவடைகிறது பிப்ரவரி மாதம்.. ஆமா.. அது ஏன் பிப்ரவரிக்கு மட்டும் 28 நாள் தெரியுமா?
ரோமானிய மன்னன் நூமா பொம்பிலஸ் என்பவர்தான், அந்த காலண்டரில் வெற்றிடமாக விடப்பட்ட இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என பெயரிட்டார்.
சென்னை: ஆண்டுதோறும் மாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரே மாதமாக இருப்பது என்னவோ பிப்ரவரி மாதம்தான். மற்ற மாதங்களை போல 29, 30, 31 என இழுத்தடிக்காமல் 28-ம் தேதியுடன் சட்டென முடிவடைந்து சம்பளத்தை கையில் சேர்த்துவிடுவதால் பிப்ரவரி மீது மாத சம்பளதாரர்களுக்கு எப்போதும் தனிப்பிரியம் உண்டு.
சரி.. என்றைக்காவது ஏன் இந்த பிப்ரவரிக்கு மட்டும் 28 நாட்கள்தான் இருக்கிறது என்று நாம் யோசித்து பார்த்திருப்போமா? இதற்கு பின்னால் இருக்கும் வரலாறு மிகவும் சுவாரசியமானது.
ரோமானியர்களின் மூடநம்பிக்கையால் காலண்டரில் ஏற்பட்ட தாக்கம் முதல் அதனை அறிவியல் திறம்பட சமன் செய்த கதை வரை இதில் அடங்கியிருக்கிறது. அதை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.

காலண்டர் பிறந்த கதை
மனித சமூகம் நாகரீகம் அடைந்த காலத்தில் சூரிய ஒளி விழும் திசையை வைத்து அன்றைய நாளின் நேரங்கள் அறிந்துகொள்ளப்பட்டது. மனிதன் அடுத்தக்கட்ட நாகரீக வளர்ச்சிக்கு சென்ற சமயத்தில், அவன் நாட்களின் தேவையை உணர்ந்தான். இந்த தேவையை பூர்த்தி செய்ய முதலில் முயற்சித்தவர் ரோமானியர்கள்தான். வான சாஸ்திரத்தில் கைத்தேர்ந்திருந்த ரோமானியர்கள், நிலவுதான் இந்த பிரபஞ்சத்துக்கு முக்கியம் என நம்பிய அவர்கள், நிலவின் இயக்கத்தை மையமாக கொண்டு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு ஒரு காலண்டரை (நாள்காட்டி) வடிவமைத்தனர். ரோமானியர் வடிவமைத்த அந்த காலண்டர்தான் உலகின் பல இடங்களில் அப்போது புழக்கத்தில் இருந்தது.

ரோமானியர்களின் மூடநம்பிக்கை
அந்த காலண்டரில் 10 மாதங்கள்தான் இருந்தன. அதாவது ஆண்டின் தொடக்கம் மார்ச் மாதமாகவும், ஆண்டிறுதி டிசம்பராகவும் இருந்தது. வருடத் தொடக்கத்தின் முதல் இரண்டு மாதங்கள் ரோம் சாம்ராஜ்ஜியத்தில் அறுவடை நடைபெறாது. எனவே, அந்த முதல் இரண்டு மாதங்களும் பயனற்றவை எனக் கருதிய ரோமானியர்கள், அவற்றை காலண்டரில் சேர்க்கவில்லை. அதேபோல, 10 மாதங்களும் தலா 29 மற்றும் 31 நாட்களை கொண்டே முடிவடைந்தன. இதற்கு அறிவியல் காரணம் எல்லாம் ஒன்றும் கிடையாது. ரோமானியர்களின் நம்பிக்கையின்படி அவர்களுக்கு இரட்டை படை எண்கள் (Even Numbers) ராசி இல்லாதவை. அவ்வளவுதான். அதனால் ஒற்றைப் படை எண்களான 29 மற்றும் 31 நாட்கள்தான் மாதங்களுக்கு இருந்தன.

ஜனவரி - பிப்ரவரி பிறந்தன
அதன் பிறகு, ரோமானிய மன்னன் நூமா பொம்பிலஸ் என்பவர்தான், அந்த காலண்டரில் வெற்றிடமாக விடப்பட்ட இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என பெயரிட்டார். ஆனால், அந்த இரண்டு மாதங்கள் கடைசி மாதங்களாக சேர்க்கப்பட்டன. எது எப்படி இருந்தபோதிலும், ஓராண்டுக்கு 12 மாதங்கள் என்ற சரியான கணக்கு அன்றிலிருந்துதான் தொடங்கியது. எனினும், "இரட்டைப் படை எண் மூடநம்பிக்கை" மன்னன் நூமாவையும் விடவில்லை. இரண்டு மாதங்களை சேர்த்தாலும் அனைத்து மாதங்களிலும் பழையபடியே ஒற்றைப் படை எண் நாட்களாகவே இருந்தன.

ஜூலியஸ் சீசர் சீர்திருத்தம்
பல நூறு ஆண்டுகள் கழித்து ரோம சாம்ராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற மன்னராக விளங்கியவரும், வான சாஸ்திரத்தில் கரைக்கண்டவருமான ஜூலியஸ் சீசர், பழைய காலண்டரில் சில குறைகளை கண்டறிந்தார். குறிப்பாக, ஒரு ஆண்டுக்கு இரட்டை எண்களை கொண்ட நாட்கள் விடுபடுவதால், ஓராண்டு சீக்கிரமாகவே முடிவடைவதை அவர் உணர்ந்தார். இவ்வாறு விடுபட்ட நாட்களை கணக்கிட்டு பார்த்த போது 28 நாட்கள் மீதம் இருந்தன. இதனால் ஓராண்டு சரியாக 365 நாட்களுடன் முடிவடையும் வகையில், பிப்ரவரி மாதத்தில் அந்த 28 நாட்களை வரவு வைத்தார். அன்றைய காலக்கட்டத்தில் பிப்ரவரி தான் கடைசி மாதம் என்பதால் அந்த மாதத்தில் அந்த விடுபட்ட நாட்கள் வரவு வைக்கப்பட்ன. பிப்ரவரி மாதம் 28 நாள் என்ற இரட்டை படை எண்ணை கொண்டிருப்பதால் அந்த மாதத்தை ரோமானியர் துக்க மாதமாக கடைப்பிடித்தனர்.

போப் கிரிகோரி அதிரடி
அதன்பிறகு, கத்தோலிக்க தலைவராக பொறுப்புக்கு வந்த 13-ம் போப் கிரிகோரிதான், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரில் சிறு திருத்தங்களை செய்தார். அந்த திருத்தப்பட்ட காலண்டர்தான் இன்றுவரை உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. அதாவது, ஜனவரி மாதத்தில் வருடம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முடிவடையும் வகையில் கிரிகோரி காலண்டரை மாற்றியமைத்தார். ஆனால், அவரும் பிப்ரவரிக்கு 28 நாட்கள் இருந்ததை மாற்ற விரும்பவில்லை. எனினும், நீண்டகால அடிப்படையில் அதை சமன் செய்வதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டு வரும் என்றும், அன்றைக்கு மட்டும் பிப்ரவரி மாதம் 29 நாட்களை கொண்டிருக்கும் என அறிவித்தார். இதுதான் பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்களை கொண்டிருக்கும் பின்னணி.












Click it and Unblock the Notifications