வெளிநாடுகளில் குறையுது.. ஆனா இந்தியாவில் மட்டும் தங்கம் விலை குறையவே இல்லையே ஏன்- ஆனந்த் சீனிவாசன்
சென்னை: அமெரிக்காவில் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்த போதிலும், இந்தியாவில் பெரியளவில் குறையவில்லை. இதற்கான காரணத்தை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆபத்தான காலத்தில் எப்போதும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எப்போதும் உதவுவது தங்கம் தான். இதன் காரணமாகவே பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கத்தை வாங்கச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்துவார்.

அதுவும் குறிப்பாக ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 400 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாகும். இதற்கிடையே வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் சமீபத்தில் விளக்கியுள்ளார்.
தங்கம்: தங்கத்தின் விலை இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாமலேயே இருக்கிறது. அதேநேரம் அமெரிக்காவில் இப்போது 22 கேரட் தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 1900 டாலராக இருக்கிறது. ஒரு அவுன்ஸ் என்பது 28.3495 கிராம் ஆகும். அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை அமெரிக்காவில் 60.8 டாலராக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் இது 5020 ரூபாய் என்ற ரேஞ்சில் இருக்கிறது.
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "இந்தியாவில் பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. எனவே, குறிப்பிட்ட பங்குகளை வாங்குவதற்கு இது சரியான நேரம். அதேபோல தங்கத்தைப் பொறுத்தவரை இப்போது ஒரு அவுன்ஸ் விலை 1900 டாலராக இருக்கிறது. இது 1870 டாலர் வரை கூட வர வாய்ப்பு இருக்கிறது. இந்தளவுக்குக் குறைந்தால் நாம் இன்னும் அதிக தங்கத்தை வாங்கலாம்.
என்ன சொல்கிறார்: இருப்பினும், ரூபாய் மதிப்பும் இப்போது குறைந்து வருகிறது. ரூபாய் மதிப்பு 82-83 என்ற ரேஞ்சில் இருக்கிறது. விரைவில் ரூபாய் மதிப்பு 85 வரை செல்லும். இதனால் தங்கத்தின் விலை இங்குப் பெரிதாகக் குறையாது. ரூபாயைப் பொறுத்தவரை நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது நிச்சயம் ஒரு நாள் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.100 தாண்டும்" என்று அவர் தெரிவித்தார். தங்கத்தின் விலை குறையும் என்கிறாரா.. இல்லை குறையாதா என்கிறாரா என்ற பலருக்கும் ஒரு சந்தேகம் வரும். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவில் தங்கத்தின் விலை குறைந்தாலும் ஏன் இந்தியாவில் தங்கம் விலை குறையாது என்கிறார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும். இதில் விஷயம் என்னவென்றால் உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருப்பது அனைவருக்கும் தெரியும்.. இருப்பினும், இந்தியாவில் தங்கம் எங்கும் கண்டறியப்படவில்லை. இதனால் நாம் வெளிநாடுகளில் இருந்தே தங்கத்தை இறக்குமதி செய்கிறோம்.
என்ன காரணம்: அப்படி இறக்குமதி செய்யும் போது நாம் டாலரில் தான் பணம் தர வேண்டும். டாலருக்கு நிகரான ரூபாய்க்கு மதிப்பு குறையும் போது, அதே அளவு தங்கத்தை இறக்குமதி செய்யவும் கூட நாம் கூடுதல் தொகையைத் தர வேண்டி இருக்கும். இதன் காரணமாகவே தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும் இந்தியாவில் பெரியளவில் குறைய வாய்ப்பில்லை என்று கூறுகிறார்.

அதாவது இப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை அமெரிக்காவில் 61.6 டாலராக இருக்கிறது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.58ஆக இருக்கும் நிலையில், இப்போது நாம் அந்த ஒரு கிராம் தங்கத்தை வாங்க 61.6* 82.58= 5086 தர வேண்டும். அதேநேரம் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து, ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83க்கு சென்றது என வைத்துக் கொள்வோம்.
அப்போது தங்கத்தின் விலை அமெரிக்காவில் அதிகரிக்கவில்லை என்ற போதிலும், ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால் நாம் 61.6* 83 = 5112 என்று கூடுதல் தொகையைத் தர வேண்டும். இதன் காரணமாகவே ரூபாய் மதிப்பு சரிந்தால், சர்வதேச சந்தையில் தங்கம் குறைந்தாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை குறையாது என்கிறார் ஆனந்த் சீனிவாசன். இதன் காரணமாகவே இப்போது அமெரிக்காவில் தங்கம் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் அது பெரிதாக குறையவில்லை.












Click it and Unblock the Notifications