ஒன்றாகும் எதிர்க்கட்சிகள்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மேஜர் தகவல்
சென்னை: சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து பேசினார். இது தேசிய அரசியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து முக்கிய தகவலை அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். யூனியன் பிரதேசம் மற்றும் இந்தியாவின் தலைநகர் என்பதால் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம், பணி இடமாற்றம் செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் மத்திய உள்துறையிடம் உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றத்துக்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் கூறியது.
இந்த உத்தரவு மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டம் நாடாளுமன்றத்திற்கு வரும்போது அதனை எதிர்க்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை வைத்து வருகிறார்.
அதன்படி இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டவர்கள் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினர். இந்த சந்திப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
நானும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தோம். டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம், மாற்றம் தொடர்பான வழக்கில் 8 ஆண்டு போராட்டத்துக்கு பின் உச்ச நீதிமன்றம் டெல்லி மக்களுக்கான தீர்ப்பு வழங்கியது. அதிகாரிகள் மாற்றம், நியமனத்துக்கு டெல்லி அரசுக்கு முழு உரிமை வழங்கியது.
மேலும் இத்தகைய உரிமை வழங்கப்படவில்லை என்றால் டெல்லியில் அரசு நடத்த முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் மத்திய பாஜக அரசு இதனை மதிக்கவில்லை. நீதிமன்றத்தில் கோடைக்கால விடுமுறை வேளையில் நள்ளிரவில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீறப்பட்டுள்ளது.

நம்முடைய நாட்டுக்கு என்று ஜனநாயகம், நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளது. ஆனால் இதனை பாஜக பின்பற்றவில்லை. லோக்சபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது. இதனால் அங்கு இந்த சட்டதிருத்தம் நிறைவேறிவிடும். ஆனால் ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 93 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் அங்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை தோற்கடிக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். இந்த விஷயத்தில் ஒத்துழைப்பு கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்'' என்றார்.
சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை சந்தித்து வருகிறார். அதன்படி தான் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்கின்றனரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications