"ஸ்டிரிக்ட்".. நேருக்கு நேர் பேசும் நேர்மையாளர்.. தலைமை செயலாளரான வெ.இறையன்பு.. ஸ்டாலின் மாஸ் முடிவு
சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக வெ. இறையன்பு நியமிக்கப்பட்டு இருப்பது மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான இவரை தலைமை செயலாளராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்து இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
ஒரு மாநில அரசு என்பது.. முதல்வர் மட்டுமல்ல.. அமைச்சர்கள், அதிகாரிகள், செயலாளர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் எல்லோரும் சேர்ந்ததுதான் அரசு. ஒரு நல்ல தலைவர் இருந்து, அவருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சரியான ஆலோசனைகளை வழங்கி, முறையாக திட்டங்கள் வகுத்தால் ஆட்சி சிறப்பாக செயல்படும்.
ஒரு மாநிலத்தில் இருக்கும் பல ஐஏஎஸ் அதிகாரிகளில் யாருக்கு உயர் பொறுப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வைத்தே அந்த ஆட்சி எப்படி இருக்கும், எந்த திசையில் செல்லும் என்பதை எளிதாக கூறிவிடலாம். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி.. ஆரம்பத்திலேயே அதிரடி முடிவுகளை எடுத்து அசத்தி உள்ளது.

தலைமை செயலாளர்
தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவி ஏற்றபின் எடுத்த முடிவுகளில் மிக முக்கியமான முடிவாக தலைமை செயலாளர் தேர்வு பார்க்கப்படுகிறது. தலைமைச்செயலாளர் பதவிக்கு வெ. இறையன்பு ஐஏஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் தேர்வே, ஆட்சி எந்த திசையில் செல்ல போகிறது என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

யார் இவர்
வெ. இறையன்பு நியமனம் குறித்து பார்க்கும் முன், அவரை குறித்து சின்ன இன்ட்ரோ.. தமிழகத்தில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளில் நீண்ட அனுபவம் கொண்டவர்களில் ஒருவர் வெ. இறையன்பு. 8க்கும் அதிகமான பட்டங்களை படித்துள்ள இவர், காஞ்சிபுரம் ஆட்சியர் பதவி உட்பட 10க்கும் மேற்பட்ட துறைகளில் தமிழக அரசில் பணியாற்றி இருக்கிறார்.

நம்பர் 1
1987ல் குடியுரிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தை பெற்று இவர் ஐஏஎஸ் ஆனார். நீண்ட அனுபவம் கொண்ட இவர்தான் தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளர். அதிமுக ஆட்சியில் தொடர்ந்து ஓரம்கட்டுப்பட்டு வந்த இவரை திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளே டாப் பொறுப்பான தலைமை செயலாளர் பொறுப்பை வழங்கி உள்ளது.

வித்தியாசம்
மற்ற ஆட்சியாளர்களை விட கொஞ்சம் வித்தியாசமானவர் வெ. இறையன்பு. காரணம் முழுக்க முழுக்க ஊழலுக்கு எதிரான இவர், சின்ன சர்ச்சையில் கூட சிக்கியது இல்லை. மனதில் பட்டதை துணிந்து சொல்ல கூடியவர். எந்த வகையிலும் முறைகேடுகளை அனுமதிக்காதவர். 100+ புத்தகங்களை எழுதியவர் என்றாலும், எங்கும் தனக்காக தனிப்பட்ட விளம்பரம் தேடியது இல்லை.

எப்படி
அதிமுக ஆட்சியில் இவர் மிகவும் ஸ்டிரிக்ட்டாக செயல்பட்டதால் பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படாமல் தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டார். ஆட்சியாளர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு எஸ் சொல்லும் நபர் கிடையாது வெ. இறையன்பு. இதனாலோ என்னவோ அதிமுகவின் 10 வருட ஆட்சியில் பெரிய பொறுப்புகள் இல்லாமல், சின்ன சின்ன பொறுப்புகளில் இவர் நியமிக்கப்பட்டார்.

ஸ்டாலின்
தற்போது ஆட்சிக்கு வந்ததும் நேர்மையான வெ. இறையன்புவை தலைமை செயலாளராக கொண்டு வந்து அசத்தி உள்ளார் ஸ்டாலின். ஆட்சி எந்த திசையில் செல்லும் என்பதை சொல்லாமல் ஸ்டாலின் நிரூபித்து உள்ளார். வெ. இறையன்பு தலைமை செயலாளராக இருக்கும் நிலையில், இதற்கு முன் நடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள், பல முறைகேடுகள் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கொரோனா
அதோடு கொரோனா தொடங்கி தமிழகத்தில் பல முக்கிய நிர்வாக முடிவுகளை எடுப்பதில் வெ. இறையன்பு இனி முக்கிய பங்கு வகிக்க போகிறார். ஏற்கனவே ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் போன்ற நேர்மையான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளதால் தமிழக அரசின் ஒவ்வொரு மூவும் இனி மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications